Tuesday, April 6, 2010

விபூதி - நாமம் - வேதியர் விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக
போடுவதன் தத்துவம்

மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை
மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து
நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதன்
வெளிப்பாடாக மூன்று கோடுகள்
போடப் படுகின்றன.
மேலும் சூரிய கலை சந்திர கலை அக்னி கலை
மூன்றையும் கடந்து
மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர்
என்பதையும் உணர்த்தும்.

நாமம் மூன்று கோடுகளுக்கு
சூரிய கலை மற்றும் சந்திர கலை இரண்டும்
வெண்மை நிற கோடுகளாகவும்
சிகப்பு அல்லது மஞ்சள் நிற கொடு
அக்னி கலையை குறிப்பதாகும்.
முதலில் நாமம் என்றால் என்ன ?
நாமம் என்றால் பெயர் என்று பொருள் படும்.
பெயர் என்பது ஒருவரை அடையாளம் காண உதவுவது.

நாமம் என்பதும்
ஒருவர் சூரிய கலை, சந்திர கலை இரண்டையும்
கடந்து அக்னி கலையை புருவ மத்தியத்தில்
இருந்து உச்சிக்கு அதாவது அண்டத்திற்கு
ஏற்றியவர் என்பது அடையாளமாக முற்காலத்தில்
ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும்
வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது.
மேலும்
நெருப்பின் நிறமான சிகப்பு மற்றும் மஞ்சள்
நிறத்தில் நடு கோட்டினை வரைந்தார்கள்.

அதே போல்
பூணூல் என்பதும் ஆகும்
பூணுலை தமிழில் முப்புரி நூல் என்று அழைப்பார்கள்.
முப்புரி என்றால்
சூரிய கலை ஒரு நூலாகவும், சந்திர கலை ஒரு நூலாகவும்
அக்னி கலை ஒரு நூலாகவும் கொள்ளப்பட்டது.
இது
ஒருவர் அக்னி கலையை அண்டத்திற்கு
ஏற்றி தத்துவங்கள் கடந்தவர் என்பதை
உணர்த்தும் முகமாக
அந்த கால பெரியவர்களால் வகுக்கப் பட்டது.

ஆனால் இன்று
அது ஜாதி ஆசாரமாக மாறி விட்டது.
காரணம் தத்துவத்தின் பொருள் விளங்காமல்
இதை சடங்காக மாற்றியதுதான்.

அதே போல்
பிராமணன் என்பவன் பிரம்மம் அனைத்தும்
உணர்ந்து தானே பிரம்மம் என்கின்ற அனுபவம் பெற்றவன்
அந்தணர் என்பவர்
ஆதி அந்தம் ஆன இறைவனின் நிலையினை
உணர்ந்து இறைவனோடு கலக்கும் முடிந்த நிலையான
அந்தம் என்கின்ற நிலையை அடைந்தவர் என்று பொருள் படும்.

வேதியர் என்பது
இங்கு வேதத்தை ஓதுபவர் என்று தவறாக
பொருள் கொள்ளப் படுகிறது.
வேதி என்றால் சுட்டு எரித்து தூய்மை படுத்துவது
என்று பொருள் படும்.
மும்மலங்களையும் ஞானத் தீயினால் சுட்டு
மும்மலம் அற்ற நிர்மல நிலையினை அடைந்தவர்
என்று பொருள் படும்.
ஆகவேதான் சிவ பெருமானையும் நிர்மலமான
வேதியன் என்று அழைக்கிறார்கள்.

யார் ஒருவர் ஞான நிலையினை
அடைந்து மும்மலம் நீக்கி
சுத்தம் அடைகிறார்களோ அவர்களே
பிராமணர்கள், வேதியர்கள், அந்தணர்கள்.

ஆகவேதான் நமது வள்ளல் பெருமானும்
ஆதியிலே வல்லவன் போட்ட பூட்டேன்று
ஞானத்தின் உட்பொருளை பற்றி கூறி உள்ளார்கள்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

No comments:

Post a Comment