Wednesday, December 31, 2014

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது ?

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது ? அன்பு சகோதரர்களே, இன்றைக்கு ஆங்கில புத்தாண்டு தினம் நல வாழ்த்துக்கள். இன்றைக்கு மேலும் ஒரு சிறப்பு. அது இன்று வைகுண்ட ஏகாதசி. இன்றைக்கு வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் எனும் பரம பத வாசல் திறக்க படும் நாள். உண்மையில் இதன் உண்மை பொருள் எந்ந என்றால் ஏகாதசி என்பது நம்முள்ளே இயங்கும் தச வாயுக்கள் பத்து வாயுக்கள் சுழுமுனையில் ஒருமை பெறுவதே ஏகாதசி எனப்படும். அந்த சுழு முனை நாடியை குண்டம் என்னும் அக்னி கலையில் வைக்கின்ற நிகழ்வே வைகுண்ட ஏகாதசி எனப்படும். அடுத்து சொர்க்க வாசல் என்னும் பரம பத வாசல் திறப்பு என்னும் நிகழ்வு நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன ஆனால் பத்தாவதாக ஒரு துவாரம் பிறக்கும் பொது அடைத்து வைக்கப்பட்டு பிறக்கின்றோம். அந்த பத்தாவது வாசலே பரமனாகிய இறைவனை காண்பதற்கும், அடைவதற்கும் உண்டான வாசல்.அந்த வாசலை திறந்தால் அதுவே சொர்க்க வாசல் அதாவது இறையுடன் அறிவதற்கு, ஒன்றுவதற்கு உள்ள வாசல். அதுவே புருவ மத்தி என்னும் திருவடியை அடைவதற்கான வாசல். அந்த வாசலை திறந்து இறையோடு ஒன்றுவதற்கு ஏற்ற தினமாக தச வாயுக்களும் ஒடுங்கி சுழுமுனையில் வாசல் திறப்பதே வைகுண்ட ஏகாதசியில் பரம பத வாசல் திறப்பு என்னும் சடங்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒருவராவது இந்த சடங்கின் உண்மை பொருளை உணர வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டது. ஆனால் சடங்குக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதர்கள். உண்மை ஞானம் பெற முயல்வதில்லை. இனியாவது முயல வேண்டும். நன்று.

Saturday, January 12, 2013

சாத்திரரும் சூத்திரரும்

சாத்திரரும் சூத்திரரும்

இன்றைக்கு தம்மை யாராவது சூத்திரர் என்று சொன்னால் கோபம் வருகிறது.
ஆனால் சூத்திரர் என்பவர் எப்படி தாழத்தப்பட்டவராக மாற்றப்பட்டார் என்பதை
இந்த கட்டுரையில் பேசப்போகிறோம்.

சத்திரியர், வைசியர், சாத்திரர், சூத்திரர், பஞ்சமர் என ஐந்து வகையாக அவரவர்
தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டனர்.

இதில் சத்திரியர் என்பவர் சத்தியத்தை கடைபிடித்து நாட்டை காக்கும் தொழிலை
செய்து வந்த மன்னர், படைத் தலைவர்கள், படை வீரர்கள் போன்றோராவர்.

வைசியர் எனப்படுபவர்கள் விளைபொருட்களை வாங்குதல் விற்றல் போன்ற
தொழிலை செய்து வந்தவர்கள்.

சாத்திரர் எனப்படுபவர்கள் ஆலயத்தை பராமரித்தல், சாத்திரத்தை ஓதுதல்
போன்றவற்றை செய்து வந்தவர்கள் ஆவர்.

பஞ்சமர் எனப்படுபவர்கள் அனைத்து தொழில்களிலும் உதவி செய்தவர்கள் ஆவர்.

இதில் சூத்திரர் எனப்படுபவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்தவர்கள்
என்றுதான் இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் உண்மை சூத்திரர் எவ்வாறு சாத்திரரினும் உயர்ந்த நிலையில் இருந்து
சூழ்ச்சியால் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதிலேதான் இருக்கிறது உண்மை.

உண்மையில் சூத்திரர் எனப்படுபவர்கள் யாராக இருந்தார்கள் என்று பார்த்தால்
உழவுத்தொழிலை செய்து வந்தவர்களே. இவர்களது தொழில்  உழவாக இருந்தாலும்
இவர்களது மற்றொரு தொழில் உண்மையை ஆராய்தல், அதை ஓலைச்சுவடிகளில்
எழுதி வைத்தல், அரசன் மற்றுமுள்ள அனைவருக்கும் ஆலோசனை கூறுதல் போன்றவை.
ஒரு காலத்தில் அறிவுத்துறை உழவர்களிடமே குடிகொண்டிருந்தது.

சரி சூத்திரர் என்பதற்கு பொருள் என்ன என்று ஆய்வோமானால்
கணிதத்தில் சூத்திரம் எப்படி ஆதாரமோ, எவ்வளவு முக்கியமானதோ
அவ்வளவு கூரிய அறிவுடையோராக உழவர்கள் திகழ்ந்தார்கள்.
காரணம் உழவுத் தொழில் செய்வோருக்கு கிடைத்த அதிக நேரமேயாகும்.

எந்த சாத்திரத்தின் உட்பொருளையும் உணர்ந்து அதன் உண்மைத் தன்மையை
உணர்ந்திருந்த காரணத்தால் அவர்களின் அரசனுக்கும், நீதியை வகுப்போருக்கும்
ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த இடத்தில் இருந்து வந்தார்கள்.

ஆனால் சாத்திரத்தை உணராமல் சாத்திரத்தை ஓதுவதையே தொழிலாக
கொண்டிருந்த சாத்திரர்கள் சூத்திரர்களின் உயர்நிலையை ஒழிக்க
சாத்திரமே உயர்ந்தது. அதன் உட்பொருளை உணர்ந்த சூத்திரர் எனப்படுபவர்
தாழ்ந்தவர் என உருவாக்கும் பொருட்டு

அதிகாரத்தில் உயர்ந்திருந்த சத்திரியர் எனப்படும் அரசர்களையும்
பொருள்  வசதி படைத்த வைசியர்களையும்
சாத்திரமே உயர்ந்தது என்று நம்ப வைத்தனர்.
அதுமட்டுமல்லாது சாத்திரத்திற்க அடுத்த உயர்ந்தவர்கள்
சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று பிரிவினையை
தோற்றுவித்தனர். இனி சிறந்த ஆலோசனைகளை வழங்கி வந்த
சூத்திரர்களாகிய உழவர்களை நான்காம் தர மக்களாக மாற்றி
சூத்திரர்களின் உயர்நிலையிடத்து பிரிவினை வாயிலாக
சாத்திரர்கள் வந்தார்கள்.

அதோடு மட்டுமல்லாது சூத்திரருக்கு துணைபுரிந்து வந்த பஞ்சமர்
எனப்படும் தொழிலோர் அனைவரும் தீண்டத்தகாதவர் ஆயினர்.

உயர் நிலை பெற்றிருந்த உழவுத் தொழில் எப்படி தாழ்ந்த நிலை அடைந்தது ?
உயர்நிலையிலிருந்த உழுவர் எனும் சூத்திரர் எப்படி தாழ்ந்த நிலை அடைந்தார் ?
என்பது இதன்வாயிலாக அறியலாம்.

ஆகவே சூத்திரர் என்பது கணிதத்தில் சூத்திரம் எவ்வளவு முக்கியமானதோ
அப்படியே சூத்திரர் என்பவர் அறிவில் சிறந்தவர் என்ற நிலையை மாற்றி
தாழ்ந்த வகுப்பினர் என்று ஒரு குறிப்பிட்ட இனத்தவர் காலம் காலமாக
சொல்லி சொல்லி வந்து அதை உண்மையாக மாற்ற எடுத்த முயற்சி
நம்மவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் கொடுமை.

இனியும் சூத்திரர் எனபோரும், பஞ்சமர் என்போரும் தாழ்ந்தவர் இல்லை
என்பதை தமிழினம் உணரட்டும்.

ஆகவேதான் நமது முப்பாட்டனார் திருவள்ளுவரும்
உழவனுக்கு பின்னால் இவ்வுலகம் செல்லும் என்று சொன்னது
உணவு அளிப்பவன் என்பதற்காக மட்டுமல்ல
அவன் நெல் களஞ்சியத்துடன், அறிவு களஞ்சியமாக திகழந்தான்
என்பதற்காகதான்.

உலகுக்கே உழுவை சொல்லிக் கொடுத்த தமிழினத்தின் விழாவாம்
உழவர் திருநாளில் உழவர்தம் பெருமையை எடுத்துக்காட்டவே
இக்கட்டுரையை எழுதினோம்.


அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, March 27, 2012

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை - 4


அன்பு சகோதரமே,

 இந்த கானும் உலகம் நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம் என ஐந்து பூத தத்துவங்களால் உருவானது என்பதை நமது முப்பாட்டன்மார்களான சித்தர் பெருமக்கள் சொல்லியுள்ளார்கள், அதை இன்ற நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த ஐந்து பூதங்களில் ஆகாயமே அநாதியானது, அதாவது ஆகாயம் அளவிட முடியாதது. மேலும் ஆகாயம் இயக்கமற்றது. அந்த ஆகாயத்தில் காற்றே இயக்கமுடையது. ஆகாயத்தில் சலனமே காற்று.

காற்றும், ஆகாயமும் பூரணம் என அழைக்கப்படுபவை.

காரணம் எந்த ஒரு பொருளின் வெற்றிடத்தையும் இந்த காற்றும். ஆகாயமும் சூழ்ந்து கொள்ளும்.

ஒரு குடம் இருக்கின்றது என்றால் அதன் உள்ளே உள்ள வெற்றிடத்தில் 
ஆகாயமும், காற்றும் சூழ்ந்திருக்கும், அந்த குடம் உடைபடும்போது அதனுள்ளிருந்த ஆகாயமும், காற்றும் வெளியில் கலந்து விடும்.

ஆகவேதான் ஆகாயமும், காற்றும் எந்த ஒரு வெற்றிடத்தையும்
வெற்றிடமாக வைத்திருக்காமல் அதனை முழுமை பெற செய்வதனால்
இவை பூரணம் எனப்படும். பூரணம் என்றால் முழுமை அடைதல் அல்லது முழுமை அடையச் செய்தல் எனப் பொருள் படும்.

சீனத்து அறிஞர் லாவோட்சு கூறுவது போல நாம் அனைவரும் வெற்றிடத்தையே எப்போதும் பயன்படுத்துகிறோம்.

ஒரு வீடு இருக்கின்றது என்றால் அதன் சுவர்களுக்குள் இருக்கும்
வெற்றிடமே நாம் பயன்படுத்தும் இடமாக இருக்கின்றது.

வீட்டின் உள்ளே இடம் விடாமல் முழுமையாக சுவர்களால் கட்டினால் நாம் அதை வாழ ஏற்ற இடமாக கருதுவதில்லை.

ஒரு குடம் இருக்கின்றது என்றால் அதன் வெற்றிடமே நாம் பயன்படுத்துவதறகு ஏற்றதாக இருக்கின்றது.

அந்த வெற்றிடமும் நமது கண்ணுக்கு புலனாகாத காற்றையும், ஆகாயத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

ஆக நாம் வாழ தேவையானது ஆகாயமும், காற்றுமே ஆகும்.
காரணம் அவைதான் அதன் இருப்பிடத்தை நமக்காக விட்டுக்கொடுத்து
விட்டு வெளியேறவும் நாம் வாழவும் வழி செய்கின்றன.

சரி தமிழ் எழுத்துக்களுக்கும் இந்த காற்று, ஆகாயம் பற்றிய கட்டுரைக்கம் என்ன சம்பந்தம் என நினைக்கத் தோன்றுகின்றதா ?

தொடர்பு இருக்கின்றது. அதைத்தான் அடுத்து சொல்லப்போகின்றேன்.

அதற்கு முன்னால்

காற்றும், ஆகாயமும் என்ன வடிவங்களை கொண்டிருக்கின்றன என்று
தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

என்ன கண்க்கு புலனாகாத காற்றம், ஆகாயமும் வடிவம் பெற்றுள்ளனவா ? என கேட்கத் தோன்றுகிறதா ? 

ஆம் அவை வடிவத்தை பெற்றுள்ளன, அவை என்னென்ன வடிவங்கள் ?

அது மட்டுமல்லாமல் அவை ஏன் அந்த விதமான வடிவங்களை பெற்றுள்ளன என காரணத்துடன் விளக்க வேண்டும்.

அடுத்து காற்றுள்ள போதே துற்றிக் கொள்வோம்.

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை - 3


அன்பு சகோதரமே,
ஒரு மொழி எனப்படுவது வெறும் வார்த்தைகளை 
கொண்டது மட்டுமல்ல,
அதன் தொண்மை, அதன் வழக்காறு, அதன் சொல்லாட்சி
போன்ற பலவற்றையும் கொண்டதாக இருக்கும்.
அதே போல மொழிக்கான எழுத்துக்கள், 
அதன் வடிவங்கள் ஏதோ ஒரு சிலர் நினைப்பது போல
ஏனோ தானோ என ஏற்பட்டதல்ல.
அதிலும் நமது தமிழ் மொழியின் எழுத்து வடிவம்
உச்சரிப்பு வடிவத்தோடு தொடர்பு படுத்தியே ஏற்படுத்தப்பட்டது.
உச்சரிப்பு எனப்படுவது ஒலி அலைகளோடு தொடர்புடையது.
ஒலி அலைகள் காற்றோடு தொடர்புடையது.
காற்று நமது சீவனோடு தொடர்புடையது.
நமது சீவன் ஆன்மாவோடு தொடர்புடையது.
அந்த ஆன்மா சிவம் எனும் எனும் பேரான்மாவோடு தொடர்புடையது.
ஆக 
அப்படிப்பட்ட ஒலி அலைகளில் ஒவ்வொரு எழுத்திலிருந்தும் உருவாகும்
ஒலி ஒவ்வொரு சக்தியை மையப்படுத்தியே ஏற்படுத்தப்பட்டது.
நாம் மந்திரங்களாக சொல்லக்கூடிய வார்த்தைகள் ஏன் மகிமை வாய்ந்ததாக கருதப்டுகின்றன.
காரணம் அதை உச்சரிக்கும் போது எழுகின்ற ஒலி அலைகளின்
தாக்கம் காற்றில் ஏற்பட்டு பல மாற்றங்களை உண்டாக்குகின்றது.
இதை பருப்பொருட்களை மட்டுமே நம்பக்கூடியவர்கள்
எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்.

நமது வள்ளல் பெருமான் சொன்ன பரிபாசை கீழே கொடுத்துள்ளேன்

பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.

அடுத்து மேலும் வரும்.

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை - 2


அன்பு சகோதரமே,

உலகில்
ஆய்வாளர்கள் என்று யாரை சொல்கிறார்கள் ?
புறப்பொருட்களையும், பருப்பொருட்களையுமே 
ஆய்பவர்களை என்றால் ஆம் அவர்கள் உண்மையை 
ஏற்றுகொள்ள மாட்டார்கள்தான்.
காரணம்
ஆய்வு எனப்படுவது அவர்களை பொறுத்தவரை
பருப்பொருட்களாக கண்ணுக்கு புலப்படுபவை மட்டுமே
உண்மை எனும் கோணத்தில் ஆய்பவர்கள்.
அப்படி பருப்பொருட்களாக இல்லாதவற்றையும்
பருப்பொருள் நிலைக்கு அவர்களால் நுணுக முடியும் பட்சத்தில்
அதனை ஒப்புக்கொள்வார்கள்.
அப்படி
பருப்பொருள் நிலைக்கு அவர்களால் நுணுக முடியாத பட்சத்தில்
அதைப்பற்றி வேறு யாராவது மேற்கோள் காட்டி இருக்கிறார்களா,
அல்லது பழைய சுவடிகள், கல்வெட்டுகள், வேறு ஏதாவது ஆதாரங்கள்
அதை வைத்தே அது உண்மை என்று தீர்மானிப்பார்கள்.

உண்மையில் ஆய்வு எனப்படுவது யாது ?

ஒரு ஐந்து வருடங்கள் ஒரு துறையை பற்றி ஆய்வு செய்வதுதான் ஆய்வா ?
ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்காக செய்யப்படுகின்ற ஆய்வுகளை
கல்லுரிகளோ, பல்கலைகழகங்களோ வேண்டுமானால் ஆய்வாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் உண்மையான ஆய்வு எனப்படுவது தன் வாழ்நாள் முழுவதும்
தான் எடுத்துக்கொண்ட துறையை பற்றி ஆய்வு  செய்வதே ஆய்வாக எடுத்துக் கொள்ளப்படும்.

முதலில் ஆய்வாளர்களை முனைவர் என அழைப்பதே சரியான சொல்லாக்கமில்லை.
ஆய்வாள்ர்களை ஆய்வர், நுண்ணாய்வர் என அழைப்பதே சரியானதாக இருக்கும்.

ஆய்வு முறையில் அக ஆய்வு, புற ஆய்வு என இருவகை உண்டு.
பட்டங்கள் பெறுவதற்காகவும். பேர், புகழ் பெறுவதற்காகவும்
செய்யப்படுபவை புற ஆய்வு.
இவ்வகை ஆய்வுகளின் நேற்றைய முடிவுகள்
இன்றைக்கு தவறுகளாகவும்
இன்றைய  முடிவுகள் நாளைக்கு தவறுகளாகவும்
மாறிக்கொண்டே இருப்பவை.

ஆனால் அக ஆய்வு செய்வோரின் முடிவுகள்
நேற்றைய முடிவுகளும், இன்றைக்கு பெற்ற முடிவுகளும்,
நாளைய முடிவுகளும் ஒன்றாகவே இருக்கும்.
காரணம் இவர்களது ஆய்வில் ஒருமை நிலை இருக்கும்.

ஆகவே புற ஆய்வான பிழைப்பு ஆய்வை மேற்கொண்டவர்கள்
ஒப்புக்கொள்ளவில்லை எனில் 
நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.



அன்பு சகோதரன்
நக்கினம்சிவம்

தமிழ் எழுத்து வடிவங்கள் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.



அன்பு சகோதரமே,

நமக்கு தெரிந்த கல்வி ஆய்வு முறையிலோ,
நமக்கு தெரிந்த வரலாற்று ஆய்வு முறையிலோ
நமக்கு தெரிந்த அறிவின் துணைக் கொண்டோ
அவர் சொன்னார். இவர் சொன்னார்,
கூகுள் சொன்னது, யாகூ சொன்னது
விக்கி பிடியா சொன்னது என
தமிழ் மொழியின் எழுத்துக்களை ஆய்வு செய்வது
குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே முடியும்.

எழுத்து வடிவங்கள் அனைத்தும் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.
இவை அனைத்தும் தத்துவ விளக்கங்களாக அமைக்கப்பட்டவை.
தத்துவம் விளக்கம் புரிந்தவர்கள் இதற்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.
நமது உலகியல் அறிவை பயன்படுத்தி இது இப்படி இருக்கலாம்
அது அப்படி இருக்கலாம் என்பது நமது கற்பனை திறனையே காட்டும்.

தமிழ் எழுத்துக்கள் ஞானத்தோடு தொடர்புடையவை என்பதை 
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புள்ளி எதற்காக வைக்கப்படுகிறது,
புள்ளியில் தொடங்கி சுழிப்பது, நீட்டுவது, வளைப்பது, கீழிழுப்பது
முடிப்பது என ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கின்றது.
அதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் நாம் செய்கின்ற ஆய்வு
நமக்கு வேண்டுமானால் சரியாக படலாம்
ஆனால் உண்மை உணர்ந்த்வர்களால் 
நமது செயல்கள் பரிகசிக்கப்படலாம்.

இருட்டிலேயே வாழ்ந்து கொண்டு இருப்பவனிடம்
வெளிச்சம் என்று ஒன்று இருக்கிறது என்று சொன்னால் நம்ப மாட்டான்.

பருப்பொருள் மட்டுமே உண்மை என்று நம்புபவன்
அரும்பொருள் ஒன்று உண்டு என்று சொன்னால் நம்ப மாட்டான்.

இனிப்பைப் பற்றியே அறியாதவன், சுவைத்திராதவன்
இனிப்பைப்பற்றி சொன்னால் நம்ப மாட்டான்

காதல், அன்பு  பற்றிய நுண்ணுனர்வு தெரியாதவனிடம்
காதல், அன்பு பற்றி சொன்னால் எப்படி புரிந்து கொள்வான்

அதுபோலதான்

பேரறிவை புரியாத சிற்றறிவாளரிடம்
பேரறிவை புரிய வைப்பதும் கடினமே.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

Thursday, January 20, 2011

தருமச்சாலை - ஞானசபை விளக்கம்

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

நமது வள்ளல் பெருமான் முதலில் தருமச்சாலையையும்,
அடுத்து ஞான சபையையும் ஏற்படுத்தினார்கள்.

இது அக அனுபவத்தை புறத்தில் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தருமச்சாலை எதற்காக கட்டப்பட்டது என்றால்
சீவகாருண்யத்திற்காக கட்டப்பட்டது.
சரி
சீவகாருண்யம் எதற்காக நாம் கடைபிடிக்க வேண்டும் ?
நாம் அனைவரும்
அதாவது மனிதர்கள் முதல் புழு புச்சிகள் வரை உள்ள சீவர்கள்
அனைவரும் ஒன்றான பரம்பொருளில் இருந்து வந்தவர்கள்.
ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள்.
ஒரு சகோதரன் பசியுடன் இருக்கும்போது
மற்றொரு சகோதரன் உணவருந்துவது தகுமா ?
ஆகவே பசித்தவர்களுக்கு உணவளிப்பது என்பது
நமக்கு நாமே உணவு அளித்துக்கொள்வதே ஆகும்.
அதுவே ஒருமை நிலைக்கு நம்மை மேலெடுத்துச் செல்லும்.

அதாவது தற்போதம் எனும் நான் எனும் உணர்வு கடந்தால்
தருமச்சாலை எனும் சீவகாருண்ய மயமாவோம்.
இது உள் அனுபவத்தில் விளங்கும்.

அடுத்து
ஞான சபையில் உள்ள சிற்சபை, பொற்சபை என்பது
இரண்டு கண்களையும் வலது கண் சூரியகலையையும்,
இடது கண் சந்திர கலையையும், நடுவில் உள்ள
ஞானசபை என்னும் முன்றாவது கண் என்னும் ஆன்மா
அக்னி கலையாகவும், அந்த அக்னி கலையான ஆன்மாவின்
உள்ளே இறைவன் திருநடம் புரிகின்றார்.

அதை புரிந்து கொள்வதற்கு நமக்கு தடையாக இருப்பது
நமது மனமும் அதை பற்றிய ராக துவேசங்களும்தான்
அதுதான் திரையாக நமது ஆன்மாவை தெரியவொட்டாமல
மறைத்து உள்ளது. அந்த திரை விலகுவதற்கு மனதின்
கட்டுப்பாட்டிலிருந்து அறிவின் நிலைக்கு நாம் உயர வேண்டும்.

அந்த நடம் புரியும் இறைவனை நாம் தற்போதமற்ற நிலையில்
காண்பதே ஜோதி தரிசனம்.

இது நமது தூல கண்களால் காணக்கூடியதல்ல.

அடுத்து கடவுள் நலை நாம் உணர்ந்ததனால் அம்மயமாதல்
எனும் சீவ சிவ ஐக்கியம் தானே ஏற்படும்.

இதைதான் நமது வள்ளல் பெருமான் ஞானநிலையினை
நாம் தெரிந்து கொள்வதற்காக புறத்திலே நமக்காக கட்டி வைத்தார்கள்.

Friday, December 24, 2010

உலக சமத்துவம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு

கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக உலகத்தில் ஏற்பட்டுள்ள
மிக பெரிய மாற்றங்கள்

உலக ஒற்றுமைக்காக ஐ நா சபை தோற்றம்
மேலை நாடுகளின் மிக பெரிய பிரச்சனையான இன வேறுபாடு
ஒழிக்கப்பட்டு இன வேறுபாடு காண்பது குற்றமாக கருதப்பட்டு
தண்டனைக்குரிய சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது.
மாமிச உணவையே பிரதானமாக உண்ணும் மக்கள் மத்தியில்
ஜீவ காருண்யம் தலை தூக்கி இருப்பது.

ஜீவ காருண்யத்தை ஆயுதமாக எடுத்த காந்தி மகான் தோன்றி
நமது இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தது.

மேலும்
நமது தேசத்தில் வருணாசிரமம் என்கின்ற
ஒரு காட்டு மிராண்டி தனமான எழுதாத சட்டம்
ஒரு பிரிவினர் உயர்ந்த வகுப்பாகவும்,
அவர்களுக்கு உதவும் வகுப்பினர் அவர்களை விட சிறிது தாழ்ந்தவர்களாகவும்
அடுத்து போர்குணம் கொண்ட வகுப்பினர் அவர்களை விட
தாழ்ந்த மக்களாகவும்
பொருளாத ரீதியில் மிகவும் பின் தங்கியவர்களை
மிகவும் தாழ்ந்த மனிதர்களாகவும்
நடத்தப்பட்டு மனிதர்களிடையே பிரிவினையும்
பேதமும் காண்கின்ற நிலை
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது இன்று எங்கே ஓடி போனது.
இவை அனைத்தும் வள்ளல் பெருமானார் வருகைக்கு பிறகு
ஏற்பட்டதுதான்.

முதலில் சன்மார்க்க அடிப்படை என்ன என்றால்
உயிர்களிடம் உள்ள பேதம் நீங்கி அனைவரையும்
சகோதரர்களாக காண்கின்ற பக்குவத்தை பெறுவதுதான்.
உண்மையில் இன்றைய உலகில்
95 சதவீதம் மக்கள் நல்லவர்களாக 5 சதவீதம் தீயவர்களாகவும்
இருக்கின்றார்கள்.

அப்படி இல்லாமல் இருக்குமேயானால்
உலகம் இன்றைக்கு அமைதி பெற்று இருக்காது.
உலகில் தோன்றிய மதங்கள், சமயங்கள் எல்லாம்
காலம் காலமாக தீமையிலிருந்து மனிதர்களை
மீட்பதற்காக பாடுபட்டன. ஆனால் அவற்றில் சமத்துவம்
முழுவதுமாக இல்லாத காரணத்தினால்
மனிதர்களை திருத்துவதற்காக
இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார்.
அவர் இன்றும் சூக்கும தேகத்தின் மூலம்
உலகை வழி நடத்தி வருகிறார்.

ஆகவே கூடிய விரைவில் உலகம் முழுமையாக
சமத்துவம் நிறைந்ததாக மாறும் என்பதில் ஐயமில்லை.

திருநீறு ( விபூதி ) தத்துவம்

திருநீறு ( விபூதி ) தத்துவம்

பதி - பசு - பாசம் என்கின்ற சைவ தத்துவத்தில்
பதி என்பது இறைவனையும்
பசு என்பது ஜீவர்களான மனிதர்களையும்
பாசம் என்பது மனிதர்கள் உலகின் மீது வைத்துள்ள பற்றுக்களையும்
( பாசம் என்றால் கயிறு என்று பொருள் படும்)
பசு ஆகிய மனிதர்கள் பாசம் எனப்படும் உலகியல் பற்றுகளில்
கட்டுண்டு பிறவி துன்பத்தில் அவதி பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சாதாரணமாக் திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால்
பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து
அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை
சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.
இதில் உள்ள தத்துவம்
பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள்
பசுவின் சாணம் (மலம்) என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய
ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால்
அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல்
நம்மி பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம்.

இது வரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த
மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும்
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நீங்கி
இறைவனே நம்மை எடுத்து ஆட்கொள்வார்.

ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி
இறை நிலையை அடைய முயற்சிப்போம்.

பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும்
பட்டினத்தாரும் மட்டுமே.
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால்
ஞானத்தை அடைந்தார்.

பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார்.
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார்
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார்.
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன்
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார்.
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது.

பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும்
என்று என்று கூறினார்.

பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது.
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான்
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது.
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார்
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது.
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார்
பேய் கரும்பு இனித்தது.

இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம்
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன்
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில்
புதைத்தார்கள். அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதே போல் மறுமுறையும் செய்தார்.
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை.
சிவத்தோடு கலந்து விட்டார்.

இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில்
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம்
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும்.
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய்
தேனின் சுவையாக மாறி விடும்.

அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம்
தேனின் சுவையோடு இருக்கும்.
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால்
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும்.
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட
முக்திக்கான அடையாளம்.

நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள்.
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம்.

அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால்
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால்
நாமும் இறை நிலையினை அடையலாம்.

Friday, November 26, 2010

தாய் மொழி கல்வி

ஆங்கில வழி கல்வியால் கல்வியின் தரம் மேம்படும் என்பது ஒரு மாயை.

இன்றை பள்ளி பாடத்திட்டம் மனப்பாடத்தில் யார் சிறந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே சிறந்த படிப்பாளிகள் என்பதாகதான் அமைந்துள்ளது.

அதாவது எவர் ஒருவர் உண்ட உணவை அப்படியே செரிமானம் இல்லாமல் வாந்தி எடுக்கின்றாரோ அவரே ஆரோக்கியமானவர். உண்ட உணவை செரிமானம் செய்து அதை உடலுக்கு ஊட்டமாக்கி கழிவை வெளியிடுபவர் ஆரோக்கியம் குறைந்தவர் என்பது போலதான் நமது கல்வி முறை உள்ளது.

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமைய கூடாது.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.

எந்த ஒரு குழந்தைக்கும் தாய் மொழி கல்விதான் சிறந்தது.

நம்முடைய துரதிஷ்டம் தாய்மொழி கல்வியை கற்றால் சமுகத்தில் மதிப்பு குறைவு. அறிவாளியாக முடியாது என்று போலியான முகமுடி ஏற்பட்டு விட்டது.

மேலும் கிராம பகுதிகளில் உள்ள நிறைய பள்ளி ஆசிரியர்களுக்கே ஆங்கில மொழி அறிவு குறைவாகவே உள்ளது. அவர்களை வைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்தால் குழந்தைகளின் நிலை ?

ஆகவே கற்பித்தல் முறை தாய் மொழியில் இருக்க வேண்டும்.
இருப்பினும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க பேசும், எழுதும் திறனை வளப்படுத்தும் விதத்தில் மொழிப்பாடங்கள் அமைய வேண்டும்.

ஆங்கில வழி கல்வி கூடங்களில் கூடுமானவரை ஆங்கில சூழலை (Atmosphere) பள்ளிகளில் உருவாக்கி வைத்துள்ளார்கள். இது மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் மீதுள்ள பயத்தினை போக்கி விடுகிறது.

ஆனால் கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இது சாத்தியமா ?

நமது கிராம பகுதிகளில் உள்ள ஒருவரை இலண்டன் மாநகரிலோ அல்லது ஆங்கிலம் பேசும் மக்கள் நிறைந்த நகரிலோ இரண்டு ஆண்டுகள் தங்க வைத்தால் அவர் தானாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வார் காரணம் சூழல்தான்.

கிராம பகுதிகளில் ஆங்கில வழி கல்வி ஏற்படுத்துவது என்பது பள்ளிக் கல்வியை பாதியில் விட்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே செய்யும்.

Wednesday, November 24, 2010

போக்கும் வரவும் அற்றவன்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

மனிதராக பிறந்த அனைவரும் அடைய வேண்டியது
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே.
கடவுள் மயமாக நாம் மாற வேண்டும் என்றால்
முதலில் நாம் கடவுளின் நிலையினை உணர வேண்டும்.
ஆனால் நாம்
நமது கண்களால் காண்பதை மட்டுமே
நம்பி பழக்கப்பட்டு இருக்கிறோம்.


மேலும்
புலன் வழியாக உணர்வதையே நம்புகிறோம்.
கண்ணால் பார்க்கின்ற உணர்வு,
காதால் கேட்கின்ற உணர்வு
நாவால் சுவைக்கின்ற உணர்வு,
நாசியால் சுவாசிக்கின்ற உணர்வு,
உடலால் ச்பரிசிக்கின்ற உணர்வு
என அனைத்தையும் உணர்வாகவே அறிகிறோம்.


ஆனால் இறை நிலை என்பது
உணர்வு கடந்த நிலையிலேயே இருப்பதாக
இறை நிலையை அடைந்தவர்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன.
இதை தற்போதம் கடந்த நிலை என்று
சமய சன்மார்க்கம் தொடங்கி
சுத்த சன்மார்க்கம் வரை அனைத்து அனுபவிகளும்
எடுத்து இயம்புகிறார்கள்.


அதாவது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
என்ற ஐந்தில் ஐந்தாவதாக உள்ள துரியாதீத நிலை
தற்போதம் அற்ற நிலை - உண்மை அறிவு நிலை.
அப்போது மனம் அற்று - சுவாசம் அற்று
நான் என்கின்ற நிலையும் அற்று நிர்மல நிலையினை
அடையும்போதுதான் கடவுள் நிலையான
ஜோதி தரிசனம் வாய்க்கும்.


போக்கும் வரவும் உள்ளது
ஒன்று நமது மனம் மற்றொன்று நமது சுவாசம்
இரண்டுமே இறை தரிசனத்தின் போது நீங்கி விடும்.
மேலும் நான் என்கின்ற உணர்வு அற்ற நிலையில்
நமது தூல கண்களால் காணாமல் நமது ஆன்மா தன்னை அறிதலே
ஆன்ம காட்சி அல்லது ஜோதி தரிசனம் எனப்படுகிறது.
ஆகவேதான் மாணிக்க வாசக பெருமான்
போக்கும் வரவும் இல்லா புண்ணியனே என்றும்,
காண்பரிய பேரொளியே என்றும் பாடி உள்ளார்கள்.


அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

Tuesday, November 2, 2010

அகர முதல்வன் - ஆதி பகவன்

அன்பு அய்யா,
திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர்.
சித்தர்கள் உருவ அருவ இரண்டு வழிபாடுகளையும் சொல்வார்கள்.
இருப்பினும் உருவ வழிபாட்டில் சொல்லப்பட்ட தெய்வ உருவங்கள் எல்லாம் அருவ
வழிபாட்டின் போது நமது உள்ளே நடைபெறும் மாற்றங்களை குறிப்பதற்காக சொல்வார்கள்.
செய்யுள் இயற்றும்போது முதலில் காப்பு செய்யுள் இயற்றுவது மரபு.
அதில் முதலாவதாக தும்பிக்கையானை முதலாவதாக வைத்தே இயற்றுவது நெடுங்காலமாக
நடைமுறையில் உள்ளது.
அந்த அடிப்படையில் விநாயகரை ஆதிபகவன் என்று கூறி இருக்கலாம் என்று ஒரு சிலர்
ஐயப்படக்கூடும்.
ஆனால் திருவள்ளுவரின் குறள் உருவ நிலை கடந்து அருவ நிலையை பற்றியும்,
சித்தர்களுக்கே சிறப்பான சாகா கல்வி பற்றியும் போதிப்பதனால் அவர் ஆதி பகவன்
என்று விநாயகரை சொல்லி இருக்க வாய்ப்பில்லை.
சரி அகர என்றால் என்ன என்று பார்த்தால்
சித்தர்கள் அகரம் என்பதனை உயிர் என்று கூறுகிறார்கள்
ஆக அகரம் ஆகிய இந்த உயிர்கள் தொடருவதற்கு
முழு முதல் காரண கர்த்தா யார் என்றால்
ஒன்றான சிவம் ( சிவன் அல்ல)
இயங்கா நிலையில் இருந்து சலனத்தின் காரணமாக இயங்கு நிலை பெற்றதனால் உயிர்கள்
தோன்றின.
அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும்
அவரே இந்த உலகு தோன்றுவதற்கு முதலானவர் என்பதனால் முதற்றே உலகு என்றும் கூறி
இருக்கிறார்.
ஆக அருவாய் உள்ள இறைவனே ஆதி பகவன் என்பது தெளிவு.
மேலும்
சாகா கல்வி பற்றி திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் சொல்லி
இருக்கிறார் என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்
அதை அடுத்து சிந்திப்போம்.
அன்புடன்
சிவம்

இந்த நிமிடத்தில் வாழ்வோம்

இந்த நிமிடத்தில் வாழ்வோம்

ஆசிய ஜோதி புத்த பகவான் சொன்ன போதனைகளில்
மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய போதனை
இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்பதுதான்.
சரி இதில் அப்படி என்னதான் உள்ளது
எல்லோருமே இந்த நிமிடத்தில்தானே வாழ்கிறார்கள் ?
என்று கூறினால் பதில் இல்லை என்பதாகதான் இருக்கும்.

நாம் உண்மையில் இந்த நிமிடத்தில் வாழ்கிறோமா ?
நமது உடல் மட்டுமே இந்த நிமிடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
நமது மனமானது
நேற்றை பற்றியோ, போன வாரத்தில் நடந்ததை பற்றியோ
போன மாதத்தில் நடந்ததை பற்றியோ
போன வருடத்தில் நடந்ததை பற்றியோ
அல்லது
நாளையை பற்றியோ
அடுத்த வாரத்தில் நடக்கப் போவதை பற்றியோ
அடுத்த மாதத்தில் நடக்கப் போவதை பற்றியோ
அடுத்த வருடத்தில் நடக்கப் போவதை பற்றியோ
சிந்தித்துக்கொண்டு இந்த நிமிடத்தில் நடக்கும்
சந்தோசத்தை இழந்து
எப்போதும் எதிர் காலத்திலோ
அல்லது
இறந்த காலத்திலோ வாழ்ந்து கொண்டு இருப்பதுடன்
நமது எண்ணத்தையும் எப்போதும்
எதிர்காலத்திலும்
இறந்த காலத்திலும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் நாம் எப்போதும் இந்த நிமிடத்தில் வாழாமல்
எதிர் காலம் பற்றிய சிந்தனையிலோ
அல்லது
இறந்த கால சிந்தனையிலோ காலத்தை வீனடித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம் நாம் மனதின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்
மனமானது எப்போதும் சிந்தனை வாயிலாக எதிர்காலம் மற்றும்
இறந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.
நம்மை நிகழ் காலத்தில் வாழ அது விடாது.

நாம் நிகழ் காலத்தில் வாழ
நாம் மனதின் ஓட்டங்களை கவனிக்கத் தொடங்கினால்
மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தத் தொடங்கும்.
மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தி விட்டால்
நாம் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களாவோம்.

இந்த பயிற்சியின் வாயிலாக நாம் காலத்தை
நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.

புத்த பகவான் அதனால்தான்
இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்று சொன்னார்.

தமிழ் - ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

உலகின் முதல் மொழியாம் தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன.
அதில் முக்கியமானது சாகா கல்வியை தெரிவிக்கும்
உலகின் ஒரே மொழி தமிழ் மட்டுமே.
மேலும் தமிழில் மட்டுமே சாகா கல்வியை பற்றிய
எழுத்து வடிவுடன் கூடிய பொருள் தரும் வார்த்தைகள் உள்ளன.
அதற்க்கு இணையான வார்த்தைகள் ஓரளவு சமஸ்கிருதத்தில் உள்ளன.
ஆனால் அனைத்தும் மறைபொருளாக அனைவரும்
புரிந்து கொள்ளும் விதத்தில் அமையாமல் ஒரு சிலருக்கு மட்டுமே
புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல் ஞான ஆராய்ச்சியில் தமிழ் மொழியை போல்
ஞானிகளால் ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள்
பாடல்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதை
உறுதியாக கூறலாம்.
ஆகவேதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
கயிலையிலிருந்து வந்த அகத்தியர் சுப்ரமணிய சித்தரிடம்
தமிழ் கற்று சித்தர் நிலையினை அடைந்தார்.
மேலும் போகர் சீன தேசத்தவர் என்றும்
கோரக்கர் வட நாட்டை சேர்ந்தவர் என்றும்
வரலாறுகள் தெரிவிக்கின்றன.

மேலும் நிறைய சித்தர்கள் வெளி நாடுகளில் இருந்து
தமிழகம் வந்து தமிழ் கற்று தமிழில் மட்டுமே உள்ள
சாகா கல்வியை கற்று சித்தர் நிலை அடைந்தார்கள்.
இன்றைக்கு நம்மில் பலர் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது
என்று தம்மை பற்றி பெருமை பட்டு கொள்கின்றார்கள்.
இது உண்மையில் மிகவும் கேவலமான நிலை ஆகும்.
தமிழில் உள்ள ஞான கருத்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற நினைப்பு வந்த உடன் அதன் உண்மை பொருளை
தமிழ் மொழியிலேயே படித்தால்தான் உண்மை விளங்கும்.

அதை விடுத்து மொழி மாற்றம் செய்து படித்தால்
அதில் நிறைய பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முதலில் மொழி மாற்றம் செய்பவர் அதனுடைய
உண்மை பொருளை புரிந்தவராக இருக்க வேண்டும்.
ஞான கருத்துக்களை எழுதியவரின் ஞான நிலையினை
உணர்ந்தவர் மட்டுமே அதை சிறப்பாக மொழி மாற்றம்
செய்ய இயலும். ஏதோ எனக்கு தெரிந்த வரையில்
மொழி மாற்றம் செய்கிறேன் என்று மொழி மாற்றம் செய்பவர்களால்
அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதைதான் கருத்தாக எழுதுவார்.
அடுத்து மொழி மாற்றம் செய்யப்படும் மொழியில் அதற்கு இணையான
சொற்கள் இருந்தால் மட்டுமே உண்மையான பொருள் உள்ள
மொழி மாற்றமாக அமையும்.

இன்றைக்கு ஆங்கிலம் உலக மொழியாக ஆக்கப் பட்டு விட்டது.
அது உலகின் துரதிர்ஷ்டமே. ஆங்கிலம் என்பது
பிச்சைகாரரின் பாத்திரத்தில் உள்ள உணவு போன்றது.
காரணம் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளில்
பெரும்பாலானவை வேறு மொழிகளில் இருந்து இரவல் பெறப்பட்டதுதான்.
அந்த மொழிக்கென்று எந்த சிறப்பும் கிடையாது.
அந்த மொழியின் எழுது உச்சரிப்புக்கும் அதன் வார்த்தைகளின் உச்சரிப்புக்கும்
சம்பந்தமே இருக்காது. உச்சரிப்பை அவர்கள் இஷ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு
நமது தமிழில் அன்பு என்பதை அ + ன் + பு (ப்+ உ) என்று எழுதுகிறோம்.
இதை நாமே நினைத்தாலும் வேறு உச்சரிப்புடன் படிக்க முடியாது.
ஆனால் ஆங்கிலத்தில் அதே அன்பு என்ற வார்த்தையை
LOVE என்று அழைக்கிறார்கள்
இதை எழுதும் போது
L+O+V+E என்று எழுதுகிறார்கள்.
இதை உச்சரிக்கும்போது எல்ஒவிஇ என்று தான் உச்சரிக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் இதை லவ் என்று உச்சரிக்கிறார்கள்.
இதுபோல் அவர்கள் மொழியில் உள்ள வார்த்தைகள் எல்லாமே
வார்த்தை உச்சரிப்பிற்கும் எழுத்து உச்சரிப்பிற்கும் சம்பந்தமே இருக்காது.
மேலும் தமிழில் உள்ள அ என்ற எழுத்துக்கு இணையாக A என்ற
எழுத்து பயன் படுத்தப்படுகிறது. ஆனால் அதை எ என்று உச்சரிக்கிறார்கள்.

இப்படி எழுது உச்சரிப்பிற்கும் வார்த்தை உச்சரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள்
உள்ள மொழி உலக மொழியாக மாறியதுடன்
நம்மில் சிலர் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன்
ஆதலால் நான் மிகுந்த அறிவாளி என்று நினைத்து கொள்கின்றார்கள்.
உண்மையில் ஆங்கில மொழி அறிவு என்பது
ஒரு மொழியில் பெற்ற மொழி அறிவு மட்டுமே.
அது ஒருவரின் அறிவை வெளிப்படுத்துவதாக கொள்ள முடியாது.
ஆகவே ஒரு மொழியின் ஞானத்தை கற்க வேண்டும் என்றால்
அந்த மொழியை முதலில் கற்றால் மட்டுமே
அந்த மொழியில் கூறப் பட்டுள்ள ஞானத்தை முழுமையாக
உணரவும் ஞானத்தை அடையவும் முடியும்.
நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி.
ஆகவே ஞானம் பெற நாம் அனைவரும் தமிழில் உணர்ந்து ஞானம் பெறுவோம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு.

Monday, October 25, 2010

முதல் ஜீவகாருண்யம் போதித்த சமயம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

உலகில் முதல் முதல் ஜீவகாருண்யம் போதித்த சமயம்
சமண சமயம் ஆகும். அப்படிப்பட்ட சமயம் இன்றைக்கு
மிகவும் சிறுபான்மை மக்களாலேயே கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
அதுவும் அதன் கொள்கைகளை உண்மையில் கடைபிடிப்பவர்கள்
ஒருவர் இருவர் என விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது.
உயர்ந்த கொள்கையை கொண்ட ஒரு சமயம் காலபோக்கில்
மக்களால் புறக்கணிக்கப் பட்டதற்கு காரணம் யாது ?

அதன் கொள்கைகள் அந்த சமயத்தை சேர்ந்தவர்களால்
தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும்,
உண்மை கொள்கைகள் சடங்குகளாக மாறி போனதும்தான்.

இந்த சமயத்தை தோற்றுவித்த மகாவீரர்
(இவரை தீர்த்தங்கரர் என்று இந்த சமயத்தவர் அழைக்கிறார்கள்)
கொல்லா நெறியை உலகுக்கு போதித்தார்.
இவரது பெயரே
யார் ஒருவர் எந்த ஜீவனுக்கும் தீங்கு விளைவிக்காமல்
இருக்கிறாரோ அவரே மகா வீரர் என்று எடுத்தியம்புவதாக
உள்ளது. (மற்ற உயிர்களை கொன்று யுத்தத்தினால் நாட்டினை
பிடித்து ஆட்சி செய்பவர்கள் வீரர்கள் அல்ல)

இந்த சமயத்தில் நிர்வாண நிலை என்று
ஒரு ஞான நிலை உள்ளது
நிர்வாணம் என்றால்
அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள்
அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம்,
பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம்
பால் உணர்விலிருந்து நிர்வாணம்
என அனைத்து செயல்கள்
அனைத்து உணர்வுகள்
எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை
அடைந்த நிலையாகும்.

ஆனால் சமண சமயத்தை சேர்ந்த ஒரு பிரிவினர்
இதை தவறாக புரிந்து கொண்டு நிர்வாணம் என்றால்
உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பது
என்று நிர்வாணமாக திரிகிறார்கள்.
மேலும் இந்த சமயத்தில் பிற்காலத்தில் நிறைய சடங்குகள்
மந்திர தந்திரங்கள், உருவ வழிபாடுகள் என அனைத்தும்
புகுந்து கொண்டதனால் பெரும்பான்மை மக்களால்
இந்த சமயம் புறக்கணிக்கப்பட்டது.

ஆகவே நமது சன்மார்க்கத்தில்
எந்த சடங்குகளையும் புகுத்தாமல்
சன்மார்கத்தின் உண்மையை அனைவருக்கும் எடுத்து கூறி
அனைவரையும் சன்மார்க்கத்தை கடைபிடிக்க வைப்போம்.

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

Monday, August 16, 2010

ஞானத்தெளிவு பகுதி 2

உருவ வழிபாடு அனைத்தும் கடவுளை மனித தரத்தில் சித்தரிக்கப்பட்டவை மட்டுமே.

கடவுள் என்பவர் ஆசா பாசங்களை கடந்தவர் என்னும்போது
அவரை வணங்கினால் மட்டுமே அவர் காப்பாற்றுவார் என்பதும்,
அவரது அடிமையாக அனைவரும் இருக்க வேண்டும் என்பது போல
நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

கடவுள் என்று கூறிககொள்ளும் ஒருவர் அவரை யார் விரும்புகிறார்கள்
என்று கேட்பது கடவுள் நிலையாக தெரிகிறதா ?

சிவனுக்கு பார்வதி என்று மனைவி ?
விஷ்னுவுக்கு மகாலட்சுமி என்று மனைவி ?
பிரம்மாவிற்கு சரஸ்வதி என்று மனைவி ?

உண்மை பரம்பொருள் ஆண் என்றும் பெண் என்றும்
பேதம் கொண்டு இருப்பார்களா ?

நமக்குதான் ஆண் பெண் பேதம் எல்லாம்
இறைவனுக்குமா ?

இறைவன் இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என்று
நமது முதாதையர் செய்து வைத்த முளைச் சலவை என்று புரியவில்லையா ?

ராமாயணத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்
மகாபாரதத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்
தசாவதாரம் என்ன என்று புரியாமல்

இறைவனையும் சிறுபிள்ளை விளையாட்டாக நாம் நினைத்து
வழிபாடு செய்வது புரியவில்லையா ?

சிவனுக்கு முக்கண் என்பது என்ன என்று புரியாமல்
சிவனின் உடலில் பாதி பார்வதி என்பது என்ன என்று புரியாமல்
விநாயகர் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்
முருகன் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்

இவர்கள் பெயரில் உருவங்களை வைத்து
அந்த உருவங்களை வழிபாடு செய்தால் நன்மை பெறலாம்
என்று ஒரு கற்பனையை ஏற்படுத்தி

இறைவன் என்பவனும் புகழுக்கு மயங்குபவன் என்றும்
அவனை
அவரே வாழ்க, இவரே வாழ்க என்று புகழ்ந்தால் அவர்
நமக்கு பல நன்மைகள் செய்வார் என்பது
அவரும் மனிதரை போன்றவர்தான்
என்பது போலதானே உள்ளது ?

இறைவன் என்பவன் இதை அனைத்தையும் கடந்தவன்
என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?

நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்பது நமது முன்னோர்களால்
அளிக்கப்பட்ட்து. அதில் உள்ள உட்பொருளை புரிந்து கொள்ளாமல்
கதையை கதையாகவே நாம் பார்த்து பழகி விட்டோம்.

ஆகவேதான் அதிலிருந்து விடுபடுவதற்கு தயங்குகின்றோம்.

சிந்தனை மேலும் தொடரும்.

Friday, August 6, 2010

கடவுள் தோற்றப் பொருளா ?

கடவுள் தோற்றப் பொருளா ?

குரங்குகளுக்கு தங்களுடைய கடவுள்
குரங்கு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.

மாடுகளுக்கு தங்களுடைய கடவுள்
மாடு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.

ஆடுகளுக்கு தங்களுடைய கடவுள்
ஆடு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.

எறும்புகளுக்கு தங்களுடைய கடவுள்
எறும்பு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.

புழுக்களுக்கு தங்களுடைய கடவுள்
புழு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.

அதே போல அறிவில் உயர்ந்தவர்கள் என்று
தங்களைநினைத்துக் கொண்டிருக்கும்
மனிதர்களும் தங்களுடைய கடவுள்
மனிதன் போன்ற உருவத்தில்தான் இருப்பதாக
நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களை
பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்
என்றும் அழியாத கடவுள்
நம்மைப்போல அழியும் உடலுடன் இருப்பாரா ?
என்று சிந்திப்பது இல்லை.

கடவுளுக்கு நம்மை போலவே கல்யாணம்

கடவுளுக்கு நம்மை போலவே குழந்தைகள்

கடவுளுக்கு நம்மை போலவே ஆசா பாசங்கள்

கடவுளுக்கு நம்மை போலவே கோபம், ஆணவம்

கடவுளுக்கு நம்மை போலவே எதிரி, நண்பன்

கடவுளுக்கு நம்மை போலவே உணவு படைத்தல்

கடவுளுக்கு நம்மை போலவே கை கால்கள், உடல், உறுப்புகள்.

கடவுள் எதிரியுடன் சண்டை போட்டு உலகத்தை காப்பாற்றுகிறார்.

அந்த எதிரியை யார் படைத்தது ?

எதிரியையும் அவரே படைத்தார் என்றால்
ஏன் படைத்து விட்டு அவரே அழிக்க வேண்டும்.

அல்லது மனிதர்கள் நினைத்துள்ள மனித கடவுளை விட
மேலான கடவுள் உள்ளாரா ?

அப்படியெனில் அந்த மேலான கடவுள் யார் ?

அவரின் செயல்தான் என்ன ?

அவரின் ருபம்தான் என்ன ?

நாம் நினைத்திருக்கும் மனித சொருப கடவுள்
எதிரிகளை அழிக்க மனித உரு கொண்டு
அழிக்க வருகிறார் என்றால்
அவருடைய ஆற்றல் மிக குறைந்த அளவே உள்ளது
என்பது தெரிகிறதே அப்படி இருக்கும் போது
நாம் ஏன் அந்த ஆற்றல் குறைந்த கடவுளை வணங்க வேண்டும்.

இவர்களை போன்ற ஆற்றல் குறைந்த கடவுள்களை படைக்கும்
கடவுளை நேரடியாக வணங்கலாமே.

அப்படிப்பட்ட மேலான உண்மையை புரிந்து கொண்டு
கீழான ஆற்றல்களை பெற்ற கடவுள்களின்
உருவங்களை வழிபடுவதை விடுத்து
உண்மை இறையின் நிலையை உணர
அக ஆய்வு செய்து உண்மையை
உணர்ந்து உண்மை வழிபாடு செய்வதுதான்
மனிதர்கள் தங்களை அறிவில் மேம்பட்டவர்கள்
என்று கூறிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

அன்புடன்

சிவம்

Monday, July 26, 2010

உண்மையை உணர அக ஆய்வு

அன்பு நண்பர்களே,

நான் சிறிய வயதாக இருக்கும் போது பள்ளியில் நண்பர்களுக்குள்
இரண்டு பிரிவு இருக்கும்
சிவாஜி கட்சி - எம்.ஜி.ஆர். கட்சி.
எங்களுக்குள் சிவாஜி கட்சி என்று ஒரு கூட்டமும்.
எம்.ஜி.ஆர். கட்சி என்று ஒரு கூட்டமும்
சண்டை போட்டுக் கொள்வோம்.
சிவாஜிதான் நல்லவர் நல்லா நடிப்பார் என்றும்
இல்லை
எம்.ஜி.ஆர். தான் நல்லவர் அவர்தான் நல்லா நடிப்பார் என்றும்
வாய்ப்பேச்சு முற்றி அடித்து கொள்ளும் அளவிற்கெல்லாம்
பள்ளி நாட்களில் நடைபெற்றன.
அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.
காரணம்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது
எங்களில் யாரும் எம்.ஜி.ஆர். ஐயோ சிவாஜி ஐயோ நேரில் பார்த்தது கூட கிடையாது. இருப்பினும்
எங்களுக்கு எம்.ஜி.ஆர். - சிவாஜி எப்படி பிடித்தது என்று பார்த்தால்
ஒன்று எங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், அக்காள் அல்லது நண்பன் யாருக்காவது பிடித்து அவர்கள் சொல்லி அது நமது மூளையிலும் பதிவாகி அவர்களை நமக்கும் பிடித்து போனதனால்
அவர்களுக்காக நாம் பரிந்து பேசி மற்றவர்களிடம் சண்டைக்கு போகும் அளவிற்கு நாம் மாறி போயிருக்கிறோம்.
இது சிறு வயதில் நடந்ததாக இருந்தாலும்
இதில் இருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுகொண்டிருக்கிறோம்.
அதாவது நாம் நமக்கு பிரியமானவர்களாக அறிந்து அனுபவித்து
பழகி தேர்ந்தெடுப்பது ஒரு வகை.
மற்றொன்று
மற்றவர்கள் சொல்லி, மற்றவர்களை பார்த்து நாம் ஒரு சிலரை பிரியமானவர்களாக கொள்கிறோம்.
அதுபோல்தான்
நாம் இறைவனையும் நமது தாய் சொன்னார், தந்தை சொன்னார்
உறவினர்கள் சொன்னார்கள் என்று ஒரு சமயத்தை சார்ந்து அந்த சமயம் எனது சமயம் என்றும், அந்த சமயமே உயர்ந்தது என்றும் நினைத்து இருக்கிறோம்.
ஆனால் உணர்ந்து அனுபவித்து ஞான நிலையினை புரிந்து எத்தனை பேர் ஒரு சமய்த்த்தில் ஈடுபாடு கொள்கின்றாகள் என்றால் ?
மிக சிலரே என்பதே பதிலாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். கட்சி - சிவாஜி கட்சி என்று
சிறு வயதில் போட்ட சண்டையை போலதான்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாம் ஈடுபடுகின்ற
வாதங்களும் இருக்கின்றன.
உண்மையில் உண்மையை அக ஆய்வு செய்தால்
நாம் செய்கின்ற வாதங்கள் நமக்கே சிரிப்பைதான் வரவழைக்கும்.

மேலும்
ஞானத்தில் தெளிவு பெற்றவர்கள்
அகத்தில் ஆய்வு செய்து
புறத்தில் பாடல்களாக எழுத்துக்களாக
வடித்து சென்ன்று இருக்கிறார்கள்.
ஆனால் நாம்
புறத்தில் அவர்கள் எழுதி சென்றதை
புறத்திலேயே ஆய்வு செய்து
நம் சிற்றறிவின் துணை கொண்டு
புறத்திலேயே எழுதுகிறோம்.
புறத்தில் உள்ள எழுத்துக்களை
அகத்தில் ஆய்வு செய்தால் மட்டுமே
புறத்தில் எழுதப் பட்ட கருத்துக்களின்
உண்மை புலப்படும்.
ஆனால் ஞானிகளால்
புறத்தில் எழுதப்பாட்ட எழுத்துக்களை
புறத்திலேயே ஆய்வு செய்வதனால்
நம் அறிவுக்கு என்ன புலப்பட்டதோ அதுவே
உண்மை என்று நாம் எண்ணுகின்றோம்.
ஆகவேதான்
அகத்தில் ஆய்வு செய்வோருக்கும்
புறத்தில் ஆய்வு செய்வோருக்கும்
கருத்து வேறுபாடு வருகிறது.

நாம் உண்மையை உணர அக ஆய்வு செய்வோம்.

அன்புடன்
நக்கினம் சிவம்

சித்தர் நெறி அறிவோம்

சித்தர்களின் பாடல்களில் நிறைய ரகசியங்கள் நிரம்பி இருக்கின்றன.
சுலபமான நிரந்தரமாக குணமாக்கும் மருத்துவ முறை.
பக்தி நெறி, அருவ வழிபாடு, தன்னயுனர்தல், இறைவனின் நிலை அறிதல், இறையோடு ஒன்றுதல் என பல நிலைகளை அவர்கள் கூறி உள்ளதால்.
இதை விட மேலான சாகா கல்வி என்னும் இறவா நெறி பற்றி கூறியுள்ளார்கள்.
இதுவே சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ள காரணமாக அமைகிறது.
ஆனால் அவர்கள் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளின் நேரடி பொருளை கொண்டு நாம் அந்த பாடலுக்கான பொருளை தெரிந்து கொள்ள முயன்றால் அது கேலிக்குரியதாக மட்டுமே இருக்கும். அவர்களது பாடல்களை நமது வெற்று அறிவை கொண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது.
காரணம் இந்த சித்தர் கல்வி என்பது எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளை இரை நிலையினை அடைவதற்காக செலவிட தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கானது.
உலகியல் செய்து கொண்டு சித்தர்களின் பாடல்களை படித்து பொருள் கொள்வது என்பது மிகுந்த சிரமமான காரியம்.
இருப்பினும் சித்தர்களின் அருள் மற்றும் விட்ட குறை இருப்பவர்கள்
பாடலுக்கான உண்மை பொருள் உணரப் பெறுவார்கள்.
சித்தர்களை கேலி செய்பவர்கள் கேலிக்குரியவர்களாக மாறுவார்கள் இது உண்மை.

நாம் நினைப்பது போல சித்தர்கள் எண்ணிக்கை வெறும் பதினெட்டு மட்டுமல்ல. சித்தர்கள் கோடிக் கணக்கானவர்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே பாடல்கள் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.
மற்றவர்கள் இறை நிலை அடைந்து ஜீவ சிவ ஐக்கியம் ஆனவர்கள்.
இந்த கல்வியை கற்பதற்கு நாம் கற்ற உலகியல் ஏட்டு கல்வி பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நாம் பிறந்தது முதல் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழுகிறோம் என்றால் அதில் அதிகபட்சமாக அறுபது வயது வரை ஒரு நல்ல வேலை செய்வதற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஏட்டுக் கல்வி பயில்கின்றோம். அதன் பிறகு அந்த கல்வியை வைத்து அதிகபட்சமாக முப்பது முதல் நாற்ப்பது ஆண்டுகள் பயன் அடைகிறோம். (வேலை செய்து ஊதியம் பெறுவதன் மூலம்) பிறகு முதுமைக்கு ஆட்பட்டு தள்ளாட்டம் எய்தி மரணத்தை அடைகிறோம்.
இதற்கு இடையில் அந்த படிப்பை படித்தால் நாள் வேலை கிடைக்கும் இந்த படிப்பை படித்தால் சிறந்த வேலை கிடைக்கும் என்று ஓடி ஓடி படிக்கிறோம்.
இப்படி அதிகபட்சமாக நாற்ப்பது ஆண்டுகள் பயன்படக்கூடிய கல்விக்கே நாம் இருபது ஆண்டுகள் செலவிட தயாராக் இருக்கும்போது. என்றைக்கும் அழியாத நிலையினை தெரிவிக்கும் ஒரு கல்வியினை கற்பதற்கு நாம் எவ்வளவு நேரம் செலவிட தயாராக இருக்கிறோம் என்றால் பதில் பூஜ்யமாகத்தான் இருக்கும்.
ஒரு கதை புத்தகத்தை படிப்பது போல சித்தர்களின் பாடல்களை படித்து புரிந்து கொள்ள நினைத்தால் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.
ஒருமையுள் தான் கற்ற கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று திருவள்ளுவர் சொன்னது இந்த கல்வியைத்தான்.
ஆகவே ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் ஒரு கல்வியை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும்.

இந்த கல்வியை கற்பதற்கு சீடனை தேர்ந்தெடுப்பதற்கு கூட சாதனா சாதுட்டயம் என்று சித்தர்கள் வைத்து இருந்தார்கள்.
பக்குவப் பட்டவர்களுக்கே அதை போதித்தார்கள்.
காரணம் இது தன்னை உணரும் கல்வி.
ஏம சித்தி எனப்படும் சாதாரண உலோகத்தை மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றும் கலை.
சாகா கல்வி எனப்படும் கற்ப பயிற்சி
தத்துவ நிக்கிரகம் எனப்படும் தத்துவங்கள் அனைத்தையும் விட்டு விலகும் நிலை
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்னும் ஜீவ சிவ ஐக்கியம்
என்னும் படிகள் உள்ளன.

சித்தர்களின் தத்துவங்களை நாம் சித்தாந்தம் என்றோ, வேதாந்தம் என்றோ, நாதாந்தம் என்றோ, போதாந்தம் என்றோ, கலாந்தம் என்றோ, யோகாந்தம் என்றோ தனி ஒரு அந்தத்திற்குள் அடக்கி விட முடியாது. காரணம் ஒவ்வொரு அந்தத்திலும் சொல்லப்பட்டவை ஒவ்வொரு அனுபவம் மட்டுமே. அதுவே முடிந்த முடிபாக இல்லை.
சித்தர்களின் வார்த்தைகளில் அனைத்து அந்தங்களும் இருக்கும் அதற்காக அவர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளல்ல. அவர்களின் உள் அனுபவத்திற்கு பொருந்துபவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அந்த அனுபவங்கள் ஒவ்வொரு அந்தத்திலும் சிறிது இருக்கலாம். ஆகவே அவர்கள் அனுபவமே வார்த்தைகளாக் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் வேதாந்திகளா ? அல்லது சித்தாந்திகளா ?
என்று நாம் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
இது மிக பெரிய ஆய்வு.

அன்புடன்
சிவம்

Monday, June 21, 2010

அன்னதானத்திற்கும் பசியாற்றுவித்தலுக்கும் உள்ள வேறுபாடு

சன்மார்க்க சங்கங்களில் செய்யப்படும் பசியாற்றுவித்தலுக்கும்
மற்ற இடங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?.

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
கோவில்கள், அன்ன தான கூடங்கள், மற்றும் பல இடங்களிலும்
அன்ன தானமாக ஏழைகளுக்கு உணவு வழங்கப் படுகின்றது.
நமது சன்மார்க்க சங்கங்களிலும் பசித்தவர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது
இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?
அன்ன தானம் என்பது பலன் எதிர்பார்த்து
அதாவது
புண்ணியம் சேர வேண்டும் என்றோ
செய்த பாவம் தீர வேண்டும் என்றோ
பலன் எதிர் பார்த்து செய்யப் படுவது.
தானம் என்றாலே பிரதி பலன் எதிர் பார்த்து செய்யப்படுவது.
ஆனால் சன்மார்க்கம் என்பதின் முக்கிய படியே
எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற
நிலையினை அடைவதுதான்.
ஆக
பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும்
தான் படுவதாக உணர்ந்து
பிற ஜீவர்கள் உணவு இல்லாமல் துன்பப் படுவதை
தான் உணவு இன்றி துன்பப் படுவதாக நினைத்து
பசித்தவர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது.
நாம் அனைவரும் ஒன்றான சிவத்திலிருந்து
ஜீவர்கள் நிலைக்கு இந்த பூமிக்கு வந்தவர்கள்.
ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள்.
ஒரு சகோதரன் உணவு இன்றி துன்பப் படுவதை
மற்ற சகோதரன் காண சகிக்க மாட்டான்.
அதுபோல் நமது சகோதர ஜீவன் உணவு இன்றி
வருந்தும் போது நாம் சகோதர உரிமையின் காரணமாக
எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் அதாவது
பாவம் போக வேண்டும் என்றோ அல்லது
புண்ணியம் சேர வேண்டும் என்று எதிர் பார்த்தோ
உணவு அளிக்காமல், நிர்மல நிலையினை அடைகிறோம்.
அதாவது நிஷ்காமியம் - இரு வினையினை நீக்கி
இறை உணர்வினை அடைவதற்கு அளிக்கப் படுகின்ற
உணவே சன்மார்க்க சங்கங்களில் அளிக்கப் படுகின்றது.

Monday, June 14, 2010

இறைவன் போட்ட முடிச்சு

இறைவன் போட்ட முடிச்சு

வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்றும்
வானமே எல்லை என்றும் நம்மில் பலர்
வானத்தை பற்றி கூறி வருகிறார்கள்.
இவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளாமல்
வானம் எதோ நம்மை விட்டு விலகி வெகு தூரத்தில்
இருப்பது போன்று கூறுகிறார்கள்.
உண்மையில் வானம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருக்கிறதா ?
இல்லை என்பதுதான் உண்மை.
நாம் இருப்பதே வானத்தில்தானே.
வானத்தில் இருக்கும் பூமியில் வானத்தை ஒவ்வொரு வினாடியும் நாம்
தொட்டுக் கொண்டுதான் வாழுகிறோம்.
அதே போல நமது உடலில் இருக்கும் வெற்றிடங்கள் அனைத்துமே
வானம் தான் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.
மேலும்
ஒவ்வொரு அணுவினுள்ளும் இருக்கின்ற வெற்றிடம் அனைத்துமே
வானம் என்பதை நாம் எண்ணுவதில்லை.
அடுத்து
வானம் எனக்கு மேலே இருக்கிறது என்று
நமது தலைக்கு மேலே காண்பிக்கிறோம்.
நமது தலைக்கு மேலே இருப்பது மேல் பகுதி என்று
நாம் எவ்வாறு முடிவு செய்ய முடியும் ?
நமது பூமி வானத்தின் மேல் பகுதியில் உள்ளதா ?
அல்லது வானத்தின் கீழ் பகுதியில் உள்ளதா ?
யார் அறிவார்கள்.
நமது தலைக்கு மேலுள்ளது மேல் பகுதியா ?
அல்லது கீழ் பகுதியா ?
நாம் நேரே நிற்கிறோமா ?
அல்லது
புவி ஈர்ப்பு விசையின் காரணமாக
தலை கீழாக தொங்குகிறோமா ?
நாம் அறிவோமா ?

ஆக மேல் எது கீழ் எது என்று தெரியாத நாம்
மேலான இறைவனின் முடிச்சை அறிய முடியுமா ?

அடுத்து சிந்திப்போம்.

அன்புடன்
நக்கினம் சிவம்

Tuesday, May 25, 2010

சுதந்திரம்

சுதந்திரம்

இந்த மனித சமுதாயத்தில் நாம் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக
நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் அனைவரும் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா என்றால் ?
இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
இறைவன் நம்மை எல்லாம் இயற்கையின் அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்.
எப்படி என்றால்
நமக்கு தினமும் பசி என்னும் ஒன்றை ஏற்படுத்தி
உணவை உண்ண வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்.
அடுத்து உண்ட உணவு செரித்து மலம் கழித்தல் என்னும் உணர்வு மூலம்
மலம் கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
தாகம் என்னும் உணர்வு மூலம் நீரை பருக வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
அடுத்து சிறு நீர கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
அடுத்து மாற்று பாலினத்தவரை பார்த்து (அவர் அங்கங்களை பார்த்து)
காம வயப்பட வைத்து அந்த காமத்தில் (சிற்றின்பம்) உடல் ஒரு திருப்தியை அடைவதாக
ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
அதன் மூலம் புதிய சந்ததியை உருவாக்கி தன்னுடைய விளையாட்டிற்கு
புதிய அடிமைகளை உருவாக்குகிறார்.

ஆக நாம்
பசி என்று ஒன்று இல்லை என்றால் உணவு உண்போமா ?
உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் மலம் கழிப்போமா ?
தாகம் என்ற உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் நீரை குடிப்போமா ?
சிறு நீர் கழிக்கும் உணர்வு தோன்றவில்லை என்றால் சிறு நீரை கழிப்போமா ?
பாலின ஈர்ப்பு இல்லை என்றால் காம உணர்வு தோன்றுமா ?
காமத்தில் இன்பம் இல்லை என்றால் யாராவது காமத்தில் ஈடு படுவார்களா?

ஒரு நாள் பசிக்க வில்லை என்றால் ஐயோ இன்று பசிக்கவில்லையே என்று பயபடுகிறோம்.
ஒரு நாள் மலமோ, சிறு நீரோ கழிக்கவில்லை என்றால் ஒரு நாள் முழுவதும் மலம், சிறு நீர் கழிக்க வில்லை என்று பயப் படுகிறோம்.
பாலின ஈர்ப்பு இல்லை என்றால் எதோ குறைபாடு உள்ளது என்று பயப் படுகிறோம்.

ஆனால்
ஒரு வாரத்திற்கு எனக்கு பசிக்காது என்றோ
ஒரு மாதத்திற்கு நான் நீர் அருந்த மாட்டேன் எனக்கு தாகமே எடுக்காது என்றோ
ஒரு வாரத்திற்கு நான் மலமோ, சிறு நீரோ போக மாட்டேன் அந்த உணர்வு எனக்கு ஏற்படாது என்றோ
எப்போதும் பாலின கவர்ச்சி எனக்கு ஏற்படாது என்றோ
நான் சுதந்திரமானவன் ஆகவே இயற்கையின் உபாதைகள் என்னை அடிமை படுத்த் முடியாது என்று சொல்ல முடியுமா ?

ஆக நாம் இயற்கை ஏற்படுத்திய பசி உணர்வு முதல் காம உணர்வு வரை அடிமையாகதானே இருக்கிறோம்.
அப்படி இருக்கும் போது நான் சுதந்திரமானவன் என்று எப்படி கூற முடியும் ?

அடுத்து சிந்திப்போம்.

அன்புடன்
நக்கினம் சிவம்

Saturday, May 22, 2010

இஸ்லாம் - சன்மார்க்கம்

ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாத்திற்கும்
சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

இஸ்லாம், கிறிஸ்துவம், ஆபிரஹாமியம் அனைத்தும் இஸ்ரேலியர்களின் ஆதி வேதாகமத்திலிருந்து வந்தவை.
ஆதி வேதாகமத்தில் இறைவன் பெயர் யெஹோவா ( யெஹ் வஹ்)
ஆதம் ஏவல் தொடங்கி கிறிஸ்துவுக்கு முன்பு வரை உள்ள அனைத்து இறை தூதர்களும் இஸ்ரேலியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒன்றுதான்.கிறிஸ்துவத்தில் ஏசு நாதர் இறைவனின் மகனாக பார்க்கப் படுகிறார். ஆனால் இஸ்லாத்தில் ஏசு நாதர் ஈசா நபியாகவும், கடைசி நபியாக முகமது நபி மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படுகிறார். (நபி = இறை தூதர்)
இந்த அனைத்து மதங்களுமே மனித நேயத்தை மட்டும் வலியுறுத்துகின்றன. (இந்த மதங்களில் உள்ள ஒரு சிலர் இந்த பூமியில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்காக படைக்கப் பட்டுள்ளன என்கின்ற கருத்து உள்ளவர்கள். மேலும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று நினைப்பவர்கள்.)
இந்த மதங்கள் அனைத்துமே இறைவன் மேலானவன் நாம் அனைவரும் இறைவனின் சொல்லை கேட்காத ஆதி பாவத்தினால் வந்தோம் என்னும் நம்பிக்கையில் உள்ளவை.
மறு பிறவியில் நம்பிக்கை இல்லாதவை.
சுவர்க்கம், நரகம் எனும் நம்பிக்கை உள்ளவை.
நித்ய வாழ்வு என்பது சொரக்த்தில் இறைவனோடு இருப்பதே என்று நம்புபவை.

சன்மார்க்கம் என்பது அடிப்படையே அனைத்து ஜீவர்களிடமும் அன்பு செலுத்துவது.
எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது.
சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபே சன்மார்க்கம்.
இங்கே உரு, உருஅரு, அரு என்னும் கடந்த நிலையே.
இங்கும் அருட்பெரும் ஜோதி என்னும் ஓர் இறை கொள்கையே உள்ளது.
எனினும் இறைவன் வேறு நாம் வேறு என்னும் நிலை கடந்து இறைவனோடு ஐக்கியம் ஆக முடியும் என்னும் நிலை உள்ளது.
மேலும் சைவ சமயத்தின் சைவ சித்தாந்தம் புரிந்தவர்கள் சன்மார்க்க நிலைக்கு மேல் ஏற முடியும். ஒரு விதத்தில் சைவ சித்தாந்தம் சன்மார்க்கத்தின் படி என்றே சொல்லலாம்.
வள்ளல் பெருமான் ஏன் சைவ சமயம் மற்றும் அனைத்து சமயங்களையும் விட சொன்னார் என்றால் சமயங்களில் சொல்லப்பட்ட ஒருமை நிலையை அடைவதற்கு பதில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறை நிலையினை உணராமல் போய் விடுவார்கள் என்பதனால்தான்.
ஆக சைவ சமயம் சார்ந்தவர்களின் அடுத்த படி சன்மார்க்கம்.
ஆகவே சைவ சமயத்தில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள்
சன்மார்க்கத்தை பாதையாக தேர்ந்தெடுக்க வசதியாக வள்ளல் பெருமானின் சன்மார்க்கம் சைவ சமயத்தவர்களால் சைவ சமயத்தோடு வைக்கப் பட்டுள்ளது.
ஆனால் சன்மார்க்க பாதைக்கு வந்த பின்னர் அனைத்து சமயங்களில் இருந்தும் விடுபட்டு விடுவதனால் சன்மார்க்கிகள் சைவ சமயமோ அல்லது வேறு எந்த சமயமோ சார்வது இல்லை.
வள்ளல் பெருமான் ஒரு போதும் தன்னை கடவுளாக சொல்லிக் கொண்டதில்லை. மேலும் அவரது உருவத்தை புகைப்படம் எடுக்க கூட அனுமதி அளிக்க வில்லை. அப்படி இருந்தும் ஒரு சில அன்பர்கள் அவருக்கு தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்தும் (எட்டு முறை)
அவர் புகைப் படத்தில் விழவில்லை.
பண்ருட்டி குயவர் ஒருவர் வள்ளல் பெருமானை போல் மண்ணினால் ஒரு சிலை செய்து வந்து அவரிடம் காட்டினார்.
அந்த சிலையை பார்த்து பொன்னான மேனியை மண்ணாக செய்து விட்டாயே என்று உடைத்து விட்டார்.
ஆகவே அவர் உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே பாடுபட்டார்.
தன்னை துதி பாடுவதை என்றுமே அனுமதித்தது இல்லை.

ஆகவே ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாம் மார்க்கத்திற்கும் வள்ளல் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

சூன்ய நிலை தாண்டிய இறை நிலை

சமணமும் புத்தமும் உயர்ந்த கொள்கைகளை கொண்டு உள்ளன.
ஜீவ காருண்யம் வலியுறுத்தப் படுகின்றன.
காரணம் உண்மையை தேடும் நிலையில்
இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் சகோதரர்களாக தெரிவதனால்
எல்லா உயிர்களிடமும் அன்பு தோன்றும்.
இருப்பினும் ஆழ்ந்த தியானத்தில் உண்மையை தேடும் போது
ஒரு நிலையில் அனைத்தும் ஒன்றும் இல்லை
என்னும் உணர்வு தோன்றும்.
இந்த நிலையினை அடைந்தவர்கள்
புத்தரும், மகா வீரரும்.
அதாவது புத்தரின் சூன்ய வாதம்
ஒன்றும் அற்ற சூன்யத்தை பேசுகிறது.
( புத்தரின் சூன்ய வாதத்தை கேலி செய்வதற்கு
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஞான சூனியம் என்று
ஒன்றும் தெரியாதவன் என்ற பொருளில் பயன்படுத்தினர்)
அதாவது புத்தரின் ஞானம் என்பது சூன்யமே உண்மை என்பதாகும்.
மனம் விடுபட்டு ஒன்றும் அற்ற நிலை பெற்றதாகும்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே கே ) அவர்களின்
அறிந்ததில் இருந்து விடுதலை என்பதும் கூட இதுதான்.
ஆனால் சன்மார்க்கத்தில்
மனம் அற்ற நிலையில் இது போன்ற சூன்ய நிலையினை தாண்டி
இறை நிலை நோக்கி செல்வதனால்.இறைவனின் தரிசனம் வாய்க்கிறது.
இங்கே கடவுள் நிலையினை அறிந்ததனால்
அடுத்து அம்மயமாதல் நடைபெறுகிறது.
ஆக சூன்ய நிலை தாண்டிய இறை நிலையை சன்மார்க்கம் போதிக்கிறது.

Friday, May 21, 2010

மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து

மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து

அன்பு சன்மார்க்க அன்பருக்கு,
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து
என்ற அவ்வையின் அகவலுக்கு விளக்கம் காண வேண்டும் என்றால்
முதலில் மூலாதாரம் என்றால் என்ன என்பதும் மூண்டெழு கனல் எது என்பதும் கால் என்றால் என்ன என்பதும் பற்றிதான்.
முதலில் மூலாதாரம் என்றால் என்ன ?
மூலம் + ஆதாரம் = மூலாதாரம்
மூலம் என்றால் நம்முடைய உடல் தோன்றுவதற்கு மூலமாய் விளங்கும் பொருள் எது ?
நமது உடலில் விளங்கும் ஜீவன் தான் நமது உடலுக்கு மூலமாக உள்ளது அந்த ஜீவனுக்குதான் ஆன்மா என்று பெயர்.
சரி ஆன்மாவின் உருவம் மற்றும் வடிவம் என்ன ?
ஆன்மா சிற்றணு வடிவினன்
ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் கொண்ட உருவினன்.
அடுத்ததாக ஆதாரம்
நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடத்திற்குத்தான் ஆதாரம் என்று பெயர்.
ஆக நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடமே மூலாதாரம் எனப்படும்.
அந்த இடத்தைதான் புருவ மத்தியம் என்று நமது சித்தர்களும், வள்ளல் பெருமானும் அழைக்கிறார்கள்.
ஆக மூலாதாரத்து மூண்டு ஏழு கனல் என்பது நமது அன்மாவைத்தான்.
சரி கனல் என்றால் நெருப்பு என்று பொருள் படும்.
நெருப்பை நீங்கள் தீபமாக மாற்ற வேண்டும் என்றால் காற்றை கொண்டு ஊத வேண்டும்.
இங்கு கால் என்றால் காற்று என்று பொருள் படும்.
மேலும்
ஒரு தூலமான பொருளை தள்ள வேண்டும் என்றால் மற்றொரு தூலமான பொருளோ ஆயுதமோ வேண்டும்.
சூக்குமமான பொருளை மேலேற்ற வேண்டும் என்றால் அதே போன்ற சூக்குமமான பொருளை கொண்டுதான் மேலேற்ற முடியும்.
ஆக
சூக்குமமாய் உள்ள சிற்றணு வடிவாகவும் சூரிய பிரகாச ஒளியாகவும் உள்ள அந்த ஆன்மாவை சூக்குமை உள்ள காற்றின் உதவியுடன் மேலேற்றுவதைதான் இந்த பாடல் உணர்த்துகிறது.
மேலும்
அந்த காற்றும் நேரடியாக மனதின் துணை கொண்டு மேலேற்றாமல்
அறிவின் துணை கொண்டு அதாவது உணர்வு கொண்டு மேலேற்ற வேண்டும் எனபதைதான் நமது அவ்வையார் சாகாக் கல்வியை பற்றி பாடி உள்ளார்கள்.

Wednesday, May 19, 2010

"கள் உண்ணாமை" மற்றும் "புலால் மறுத்தல்"

"கள் உண்ணாமை" மற்றும் "புலால் மறுத்தல்"

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

திருவள்ளுவர் கள் உண்ண கூடாது என்றும் புலால் மறுக்க வேண்டும் என்று ஏன் கூறினார் ?

திருவள்ளுவ பெருந்தகை கள் உண்ணாமை என்றும், புலால் மறுத்தல் என்றும் கூறி இருப்பதன் காரணம்.

கள் என்பது பனை மரத்தில் இருந்தோ அல்லது தென்னை மரத்தில் இருந்தோ
அதன் குலைகளை சீவி அதில் வடியும் பாலை குடத்தில் பிடித்து வைத்தால்
அது புளிப்பு ஏறி போதை தரும் பொருளாக கள் ஆக மாறும்.

கள்ளை உண்ணக்கூடாது என்றதற்கு காரணம் நாம் பனை மற்றும் தென்னை மரத்தில் விளையும் பொருட்களான
நுங்கு, பணம் பழம், பனங் கிழங்கு போன்றவற்றையும் தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் போன்றவற்றையும்
உணவாக உண்கிறோம். அதே போல பனை தென்னையில் இருந்து கிடைக்கும்

கள்ளையும் நாம் உண்பது தவறில்லை என்ற எண்ணம் நம் மனதில் வந்துவிடக் கூடாது
என்பதற்காகத்தான் கள் உண்ணாமை என்று கூறி உள்ளார்கள்.

கள் உண்பவர்களின் அறிவு மழுங்கி மற்ற பாவங்களை செய்வதற்கு தூண்டுகோலாய்
அமைந்து விடும் என்ற காரணத்தால் கள் உண்ணக் கூடாது என்று கூறினார்கள்.


அடுத்து புலால் மறுத்தல் என்று கூற காரணம்:
நமது உடல் புலாலாக உள்ளது. புலால் உண்பது என்பது
நமது உடலை நாமே உண்பதற்கு சமம்.
நமது உடலை நாமே சாப்பிடுவோமா ?
பிற உயிர்களை கொன்று உண்ணுவது நம்மை நாமே கொன்று உண்ணுவதற்கு சமம்.
ஆகவேதான் புலாலை மறுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.


மேலும் மனிதர்கள் கள் அல்லது போதை பொருட்களை உண்ணுவதற்கு
அடிப்படை காரணம் தற்காலிகமாக தன்னை மறக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.
அது தற்காலிகமாக மூளையை மழுங்க செய்து தான் என்கின்ற உணர்வை அதிகரிக்க செய்து
பின்னர் இல்லாமல் செய்து விடும்.


ஆக மனிதர்கள் நான் என்கின்ற உணர்வை விடுவதன் மூலம் இன்பத்தை அடைய முடியும்
என்று தெரியாமலேயே உணர்கிறார்கள். ஆனால் உண்மையில் இறைவனை உணர வேண்டும்,
இறைவனோடு கலக்கக வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் போதையின் மூலம் இழக்கின்ற
தற்காலிக நான் என்கின்ற உணர்வு அல்லாமல் நிரந்தரமாக நான் என்கின்ற உணர்வு போய் இறை
உணர்வாக மாறும்.


ஆகவே அன்பர்களே கள் உண்ணாதீர்கள், புலாலை மறுங்கள், இறை நாட்டத்தை கொள்ளுங்கள்.

Tuesday, May 18, 2010

சுவர்க்கம் நரகம் - 2

இது வரை நரகம் என்பது துக்கம் நிறைந்தது என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே கூறுகின்றன.
நாம் வாழும் இந்த உலகமும் (சம்சாரம்) துக்கம் நிறைந்ததாகவே உள்ளது.
நாம் உடல் எடுத்தது முதல் உறவுகள் தொடர்கின்றன.
உண்மையில் இவர்கள் அனைவரும் நமது உடலுக்கு மட்டுமே உறவுகளாக தெரிகின்றார்கள். காரணம் நாம் உடல் சார்ந்து பார்க்கும் தன்மை பெற்றதனால்.
ஆன்மா சார்ந்து பார்க்கின்ற தன்மை பெற்றவர்களுக்கும் இவர்கள் உறவுகளாகவே தெரிவார்கள்.
ஆனால் அந்த உறவு ஒன்றிலிருந்து பிரிந்து வந்த அனைவரும் சகோதர உணர்வு மட்டுமே.
மற்ற படி தாய், சகோதரன், சகோதரி, மனைவி, குழந்தைகள், போன்ற உறவுகள் அனைத்தும் உடல் சார்ந்து இருப்பதனால் இதில் உறவு தோன்றியது போல் பிரிவும் உள்ளதனால் துக்கமே மேலோங்கி இருக்கிறது.
எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் இந்த உறவுகளில்
ஏற்படுவதனால் இந்த உறவுகள் துக்க கரமானதாகவே இருக்கிறது.
தேக உணர்வின் காரணமாய் இங்கே மனதின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. மனம் எப்போதும் மாயையின் கைப்பாவையாகதான் இயங்கி வருகிறது.
மனம் மற்றும் புலன் வழி செல்லாமல் அறிவின் வழி செல்பவர்கள்
மிக சுலபமாக அசுத்த மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

ஆன்மா இங்கேயே விழிப்பு நிலையினை அடைந்து விட்டால்
இறை நிலையினை அடைவதற்கு முன்னர்
அதே போன்ற விழிப்பு நிலை பெற்ற ஆன்மாக்களுக்கு
உண்மையை உணர்த்த முடியும்.

அப்படி என்றால் நாம் அனைவரும்
விழிப்பு நிலையில் இல்லையா என்றால் ?
இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
நாம் ஒரு வித துயில் நிலையில் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
என படிகளை கடந்தால் மட்டுமே
இறை நிலையினை அறிய முடியும்.

இதைதான் துரியமும் கடந்த சுகம் பூரணம் என்று கூறி இருக்கிறார்கள்.

இங்கே மாயை என்பது நமது ஆன்மா இந்த உடல் படுகின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் தான் படுவதாக நினைத்து இந்த உடல் தான் நான் என்கின்ற உணர்வுடன் இருப்பது. இததான் நான் என்னும் உணர்வு என்று கூறி இருக்கிறார்கள்.

ஆக இந்த உணர்வு கடந்த நிலைக்கு செல்வதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அடைய வேண்டியதாக வகுக்கப் பட்டுள்ளது.

அதைதான் உரு உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீதமாம் அருட் பெரும் ஜோதி
என்று கூறி உள்ளார்கள்.

இதற்கு இடையில் ஆன்மா சூகுமமாகதான் எப்போதும் இருக்கிறது.
ஆகவே அது இன்னொரு சூக்கும உடல் எடுக்க தேவை இல்லை.
ஆக நரகம் என்பது இந்த மனித தேகம் நான் என்னும் உணர்வுடன் வாழ்வதுதான்.
சுவர்க்கம் என்பது இந்த தேகம் நான் அல்ல
நான் ஒன்றிலிருந்து பிரிந்து வந்தவன்
அந்த ஒன்றில் ஒன்றுவதை உணர்வதுதான்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான்.

தேகம் நான் அல்ல என்பதை உணராமல் இருந்தாலும் தெரிந்து பாப காரிய்ங்களைச் செய்யாமல் , புண்ணிய காரியங்களையே செய்துவரும் மனிதர்களும் நரக்த்தில்தான் இருக்கிறார்களா,?
அப்படியானால் ஒரு சிலருக்கு மட்டுமே சொர்கம் கிடைக்குமா, அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான் சொர்கம் எனும் நிலை கிடைக்குமா,?

தேகம் நான் அல்ல என்னும் உணர்வு இல்லா நிலை இருப்பினும்
ஒருவர் செய்யும் நற் செயல்கள் அவர் மனதின் கட்டுப்பாட்டிலிருந்து விடு படுகிறார் என்பதற்கான அறிகுறி.
அவர் பாவ செயலகளிலிருந்து விலகி புண்ணிய காரியங்களை செய்வதனால் அவர் அறிவின் வழி நடக்கிறார் என்பது தெளிவு.
எவர் ஒருவர் அறிவின் வழி நடக்கிறாரோ அவருக்கு உண்மை மிக சுலபமாக புலப்படும்.
அல்லது இறைவன் அவருக்கு உண்மையை உணர வைப்பார்.
இது போன்றவர்களுக்கு ஞானம் மிக சுலபமாக கை கூடும்.
இருப்பினும் அவர் தான் செய்வது புண்ணிய காரியம் என்றும் அந்த புண்ணியம் என்னையா அல்லது எனது குடும்பத்தையோ சேர வேண்டும் என்று செய்தால்
அது அவருக்கு விலங்கு ஆகத்தான் அமையும்.
தான் செய்கின்ற அனைத்து நற் காரியங்களும் நிஷ் காமியம் அதாவது
நிர்மலம் என்னும் பற்றற்ற நிலையில் செய்யும் போது மிக சுலபமாக
நரக நிலையிலிருந்து விடு பட முடியும்.

இங்கே புண்ணிய காரியம் என்பது தங்கத்தால் ஆன சிறை
பாவ காரியம் என்பது இரும்பினால் ஆன சிறை.
சிறை என்பது தங்கத்தினால் இருந்தால் என்ன ?
இரும்பினால் இருந்தால் என்ன ?
சிறையில் இருக்க யார்தான் விரும்புவார்கள் ?
ஆக நல் வினை மற்றும் தீ வினை இரண்டும் கடந்தால்
பிறவியிலிருந்து விடுபடலாம்.
அதாவது இறை நிலையை அடையலாம்.

மற்ற படி எந்த ஆன்மாவும் சுவர்க்கம் நரகம் என்று
உலகில் உள்ள எந்த மதத்திலும் சொல்லியபடி அனுபவிப்பது இல்லை.

Monday, May 17, 2010

சுவர்க்கம் - நரகம்

சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல
எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.
ஆனால்
இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது
நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே.
இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா
எந்த இன்பத்தையோ அல்லது
எந்த துன்பத்தையோ
எதன் மூலம் அனுபவிக்கும்.
இந்த தூல உடலுக்கு மட்டுமே
வலியும், சந்தோஷமும்.
தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்
எப்படி சாப்பிட முடியும்.
எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும்.
நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.
நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.
ஆன்மா எப்படி வேகும்.
ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பது
நம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல.
இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.
முதலில் நரகம் என்றால் என்ன ?
நர + அகம் = நரகம்
நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம்.
அதாவது
நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.
நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான்
சொர்க்கம்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.
அன்புடன்
நக்கினம் சிவம்

Friday, May 14, 2010

ஜீவ ஐக்கியம்

ஒன்றான சிவம் அசைவற்ற நிலையில் உலகம் என்ற ஒன்று இல்லை.
அதன் அசைவின் பயனாய் சக்தி என்ற ஒன்று தோன்றியது.
அதுவே ஆன்மா. அசைவின் காரணமாய் அது சுத்த மாயை வயப்பட்டது.
நமது
மனதை ஜீவனிலும்,
ஜீவனை ஆன்மாவிலும்,
ஆன்மாவை சிவத்திலும்
சேர்க்கின்ற ஜீவ ஐக்கியத்தை
காலம் காலமாக சமாதி நிலை என்று நமது பெரியவர்கள் வழங்கி வருகிறார்கள்.
சமாதி என்பது மனம், அறிவு, ஜீவன், ஆன்மா ஆகிய எதுவும் இயங்காமல் சிவத்துடன் கலந்த நிலை ஆகும்.
இதைதான் சித்தர்களும் ஞானிகளும் பக்குவப்பட்ட ஜீவர்களுக்கு போதித்து வந்தார்கள்.
ஆக இந்த இயக்கமற்ற நிலைக்கு செல்ல வல்லவர் முக்தி நிலை பெற்றவர்.
இதற்க்கு மேலான நிலை பக்குவப்பட்ட ஜீவர்களுக்கும், விட்ட குறை உள்ளவர்களுக்கும் விளங்கும்.

பூனை கட்டி ஆசிரமம்

பூனை கட்டி ஆசிரமம்

நமது வள்ளல் பெருமான் சாதி சமயங்களில் நிறைந்து கிடக்கும் சடங்குகளை ஒழித்து அனைவரும் சுத்த சன்மார்க்கத்தை அடைய வேண்டும்
என்ற இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற நமக்கு பாதை வகுத்து கொடுத்துள்ளார்கள்.

ஆனால் ஒரு சிலர் புதியதாக சன்மார்க்கத்திற்கு சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள். இது சன்மார்க்கத்திற்கு எதிரானது.
நமது பெருமானார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்று சடங்குகளை ஒழிக்க வேண்டும்
என்று கூறி உள்ளார்கள். அப்படிப்பட்ட நமது பெருமானாரின் பாதையான சுத்த சன்மார்க்கத்தில் சடங்குகள் தேவையா ?

ஒரு ஞானியின் மடத்தில் தினமும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.அந்த மடத்தில் ஒரு பூனை இருந்தது.
அந்த பூனை கூட்டு பிரார்த்தனையின் போது ஒவ்வொரு நாளும் சத்தம் எழுப்பி கொண்டு இருந்தது.ஒரு நாள் அந்த ஞானி இனி மேல் கூட்டு பிராத்தனை நடைபெறுவதற்கு முன்னர் அந்த பூனையை அந்த தூணில் கட்டி விடுங்கள் என்று கூறினார். அன்று முதல் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவதற்கு முன்னர் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.சில நாள் சென்ற பின்னர் அந்த ஞானி இறை நிலையினை அடைந்தார்.அன்றே அந்த பூனையும் செத்து விட்டது.புதிய குருவாக தலைமை சீடர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.அடுத்த நாள் கூட்டு பிரார்த்தனை புதிய குருவின் தலைமையில் நடைபெற இருந்தது. புதிய குரு சீடர்களிடம் உடனே போய் ஒரு பூனையை பிடித்து வாருங்கள்.நமது குரு பூனையை தூணில் கட்டிய பிறகுதான் கூட்டு பிரார்த்தனையை ஆரம்பிப்பது வழக்கம்.ஆகவே ஒரு பூனையை பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து பின்னர் கூட்டு பிராத்தனை ஆரம்பிக்கப்பட்டது.அதுவே வழக்கமாகவே அந்த ஆசிரமத்திற்கு பூனை கட்டி ஆசிரமம் என்று பெயர் ஏற்பட்டது.

அது போல் தான் நமது சடங்குகள் எல்லாம் முற்காலத்தில் உள் தத்துவங்களை வெளியாக காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டன. அந்த சடங்குகள் அனைவரும் ஞான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஏற்படுத்தப் பட்டன.ஆனால் பூனையை கட்டிய கதையாக முடிந்தது.

அதுபோல்தான் நாம் புதிய சடங்குகளை சன்மார்க்கத்திற்கு என ஏற்படுத்துவதும் ஆகி விடும். இதை நமது வள்ளல் பெருமான் உணர்ந்து தான் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்கும் தேவை இல்லை கொல்லா விரதம் தவிர வேறு எந்த விரதமும் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ஆகவே நமது சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்குகளும் தேவை இல்லை என்பதை உணர வேண்டும்.

மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

மாயையில் இருந்து விடுபடுவது எப்படி ?

நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாயை இரு வகை படும்
அவை அசுத்த மாயை, சுத்த மாயை
அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை
பற்றியது. மனம் வழி, புலன் வழி நடக்க வைப்பது.
சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி
இருக்கும் ஞானிகளை பற்றியது.
அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.
சிவம் மட்டுமே மாயை இல்லாதது.


உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்
மனம் வழியும் புலன் வழியும் நடந்து
வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.
வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.


ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை
வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது
மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை
அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம் சுத்த மாயை கொண்ட ஆன்மா
சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.


அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்
சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா
மீண்டும் பிறவாத நிலையை அதாவது
சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து விடும்.


ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது
நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை
நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க
பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை
எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.


அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு
ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.
அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு
நமது அறிவால் மனதை பின் தொடர்வது.
எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்
நாம் பின் தொடர்கிறோம் என்றால்
அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.
அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று
அவருக்கு தெரிந்து விட்டது என்றால்
அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.
அதை போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க
தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய
செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து
அறிவின் வழி நடக்க தொடங்கும்.


அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால்
புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும்
அறிவின் வழி நடக்க தொடங்கும் போது
நாம் மாயையின் வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை
அறிவு நமக்கு அளித்து கொண்டிருக்கும்.
இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்
தானாகவே தூய்மை பெறும்.


அடுத்து ஒரு சுலபமான பயிற்சி
நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா
என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து
பின்பு அந்த செயலை செய்வதன் மூலம்
தவறான செயல்களை செய்வதிலிருந்து
நாம் மிக சுலபமாக விடுபடலாம்.


அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்
விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள்
நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.
சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.
சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.


இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் நாம் நமது மனதை
அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்
நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

தை பூசம் விளக்கம்

தை பூசம் விளக்கம்

நமது வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..
காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
அகரம் + உகரம் + மகரம் = ஓம்

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்
இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.
அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி

சந்திரன் என்பது மன அறிவு,
சூரியன் என்பது ஜீவ அறிவு.
அக்னி என்பது ஆன்மா அறிவு.

சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம்
நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

மேலும் தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.

மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டன.

அண்டம் - பிண்டம்

அண்டம், பிண்டம் விசாரம்


பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும் பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால்

அண்டத்தில் அண்டம்,
அண்டத்தில் பிண்டம்,
பிண்டத்தில் அண்டம்,
பிண்டத்தில் பிண்டம்

உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.
பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.
அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.
அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.
அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள்.
இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.
அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.
மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.
அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும்,
திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.

Monday, May 3, 2010

அமுத நிலை

சித்தர்கள் அமுதத்தை பற்றி குறிப்பிடும்போது
அக அமுதம், புற அமுதம், அகபுற அமுதம், புற புற அமுதம்
என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்த மாங்காய் பால் என்பது அக அமுதம்.
தேங்காய் பால் என்பது புற அமுதம்.
நமது உடலில் உள்ளது அனைத்தும் வெளியான அண்டத்தில் உள்ளது.

அது அகத்தில் நான்காகவும்,
அண்டத்தில் நான்காகவும்
மொத்தம் எட்டாக உள்ளது என்று வள்ளலார் கூறி இருக்கிறார்.
மேலும்
வள்ளலார் நமது உடலில் சுரக்கும் வியர்வை பிண்ட அமுதம் எனவும்
அண்டத்தில் மழை அதற்க்கு இணையான ஒரு அமுதம் எனவும் கூறி இருக்கிறார்.

இதை அறிவியல் கண்ணோட்டத்தில் எடுத்து செல்வதில் ஒரு சிக்கல் உள்ளது.
இந்த அக அமுதம் என்பது பயிற்சியின் வாயிலாக சுரப்பது.
இந்த பயிற்சி என்பது உடல் சார்ந்தது மட்டுமல்லாமல்
மனதிற்கும் பயிற்சி அளிக்கப் படுகிறது.
அதாவது மனம் அற்ற நிலையினை அடைவதற்கு பயிற்சி மேற்கொள்ளப் படுகிறது. இந்த மனமற்ற நிலையினில் அறிவு மட்டுமே விளங்கும்.

இந்த அறிவு நிலை பல படிகளை கொண்டது.
இந்த அறிவு நிலைக்கு தகுந்தார்போலவே பிரபஞ்ச ஆயுள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவு நிலை உயர உயர அவர்கள் கால நிலை கடந்த கலாதீதன் ஆக மாறி விடுவார்கள்.

இங்கே அவர்களுக்கு மனம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினால்
அவர்கள் அறிவு சுத்த அறிவிக்க இருக்கும். அதனால் அவர்கள் பயம் அற்று இருப்பார்கள்.
நாம் அறிவியல் துணை கொண்டு புற அமுதத்தை தயார் செய்ய முடியும்.
ஆனால் இதில் உள்ள பிரச்சினையே அவர்கள் மனதின் துணையுடன் பார்த்து பழகிய காரணத்தினால் அறிவின் உயர்ச்சியை புரிந்து கொள்ள முடியாமல் மன பாதிப்பிற்கு உள்ளாக கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது.

நாம் ஒரு சில யோகிகளை இந்த நிலையில் இன்றைக்கும் பார்க்கலாம்.
காரணம் மனதின் நிலையை சரியாக மாற்றி அமைக்காமல்
உள்ளே ஏற்படும் மாற்றங்களையும், கால நிலை மாற்றங்களையும்
இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமே ஆகும்.

ஆகவேதான்
இத படிகளாக வைத்தார்கள்.
முதலில் மனதை ஒழித்தல்
இது ஏம சித்தியிலும், சாகா கல்வியிலும் பயிலப்படும்.
அடுத்து நம்மை பற்றிய உணர்வுகளை போக்கும் பயிற்சியாக
நம்மை பற்றிய 96 தத்துவங்களையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுவது
இதில் மனம் முதல் இந்திரிய உணர்வு அனைத்தும் காணாமல் போய் விடும்.
அடுத்து கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பது
சுத்த அறிவினை பெற்று அறிவே வடிவமாக மாறுவது.
இங்கே சித்தர்கள் மாங்காய் பால் என்று சொன்னதற்கு காரணம்
மா என்றால் உயர்ந்த என்று பொருள் படும்
காய் என்றால் காயம் என்னும் உடலை குறிக்கும்.
மாங்காய் என்றால் நமது உடலில் உயரத்தில் உள்ள தலையை குறிக்கும்.
மேலிருந்து சுரக்கும் அமுதத்திற்கே மாங்காய் பால் என்று பெயர்.

அன்புடன்
நக்கினம் சிவம்.